கிளம்பப்போன ரயில்.. சரசரவென புகுந்த அதிகாரிகள் ‘2 டிராலி.. ரூ.112 கோடி ஹெராயின்’ இளைஞர் அதிரடி கைது!
பெங்களூர் : பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்படவிருந்த ரயிலில் ரூ.112 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளுடன் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எத்தியோப்பியாவில் இருந்து பெங்களூருக்கு போதைப் பொருள்களை கடத்தி வந்த தமிழகத்தைச் சேர்ந்த நபரை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ரயிலில் மேற்கொண்ட சோதனையில் டிராலியில் வைத்து கடத்தப்பட்ட 16 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
பெங்களூர் இதுவரை கண்டிராத மிக அதிக அளவிலான ஹெராயின் பறிமுதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை! ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை! எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்டாலின் கடிதம்!
புறப்படும் நேரத்தில்
கர்நாடக மாநிலம் பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் ரயிலில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் பெங்களூரு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, 11.30 மணியளவில், அந்த ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக சரசரவென வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் பெங்களூர் - டெல்லி ரயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழக இளைஞர் கைது
அந்த ரயிலில் சந்தேகப்படும்படி இருந்த தமிழகத்தைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் 2 டிராலிகளில் 16 கிலோ எடையுள்ள ஹெராயின் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் எத்தியோப்பாவிலிருந்து பெங்களூருக்கு விமான மூலம் ஹெராயின் போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது.
எத்தியோப்பியாவில் இருந்து
எத்தியோப்பியன் விமானத்தில் இந்த போதைப் பொருட்களோடு பெங்களூர் வந்த அந்த இளைஞர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்காமல் தப்பித்துள்ளார். பிசினஸ் விசாவில் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகருக்கு சென்றிருந்த அவர் ஹெராயினோடு பெங்களூர் வந்துள்ளார். டெல்லி சென்று அந்த போதைப்பொருட்களை ஒப்படைக்க இருந்தபோது போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
சர்வதேச கடத்தல் கும்பல்?
கைதான இளைஞர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த போதைப்பொருட்களை கொடுத்து அனுப்பிய கும்பல் யார்? இதற்காக எவ்வளவு பணம் கைமாறியது என்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிகப்பெரிய அளவில் கடத்தல்
பெங்களூர் ரயில் நிலையத்தில் ரூ.112 கோடி மதிப்புள்ள ஹெராயின் சிக்கியிருப்பது சமீபகாலங்களில் இதுவே முதன்முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த திடீர் சோதனையில், ரூ.112 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது பெங்களூர் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்தடுத்து சம்பவம்
சமீபத்தில் டெல்லியின் பஜன்புரா பகுதியில், ஹெராயின் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் தொடர் சோதனை நடத்தியதில், மொத்தமாக 21 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இந்த ஹெராயினின் சர்வதேச மதிப்பு 130 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து, கோடிக்கணக்கில் மதிப்பு கொண்ட ஹெராயின் சிக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.