ஓடும் காரில் மாலை மாற்றிய ஜோடி.. காதலனா, பெற்றோரா.. யாருடன் செல்வது? ட்விஸ்ட் கொடுத்த புதுப்பெண்
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பல்லாரியில் இருவேறு சமுகத்தைச் சேர்ந்த காதல் ஜோடி ஓடும் காரில் மாலை மாற்றிக் கொண்டனர். காரை விட்டு இறங்கிய உடன் பெற்றோருடன் செல்வதா, கணவனுடன் செல்வதா என்று குழம்பிய பெண், கடைசியில் காப்பகத்திற்கு போனார்.
கர்நாடக மாநிலம் பல்லாரி தாலுகா தேக்கலகோட்டை பகுதியை சேர்ந்த 24 வயதாகும் சிவபிரசாத், கொப்பலை சேர்ந்த அம்ருதா என்பவரை காதலித்து வந்துள்ளார். அவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார். இந்த காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் ஒரு கட்டத்தில் தெரியவந்தது.

இதனால் அந்த காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும் இந்த ஜோடி தொடர்ந்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளார்கள். இந்நிலையில் பெற்றோர் எதிர்ப்பின் காரணமாக இரண்டு பேரும் வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி இரண்டு பேரும் வீட்டை விட்டு அண்மையில் வெளியேறினர். இந்த நிலையில் காரில் சென்ற அவர்கள் 2 பேரும், நண்பர்கள் முன்னிலையில் திடீரென மாலை மாற்றிக் கொண்டனர். ஆனால் திருமணம் செய்யவில்லை. காதல் ஜோடி மாலையும் கழுத்துமாக காரை விட்டு இறங்கிய உடன், இதுபற்றிய தகவல் அறிந்து இருவீட்டாரும் மோதலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.
இதனிடையே அம்ருதாவின் பெற்றோர் அவரை அழைத்து செல்ல முயன்றார்கள் . ஆனால் பெற்றோருடன் செல்ல அம்ருதா மறுத்துவிட்டார். தனது கணவருடன் தான் இருக்க போவதாக கூறியிருக்கிறார். அப்போது அம்ருதாவிடம் அவரது பெற்றோர் தங்களை பற்றி கொஞ்சமாவது நினைத்து பார்க்கும்படி கெஞ்சினார்கள்.
இதனால் மனம் மாறிய அம்ருதா, பெற்றோருடன் செல்லவதாக முடிவு செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவபிரசாத், தன்னுடன் இருக்கும்படி அம்ருதாவை கெஞ்சினார். இதன்காரணமாக அம்ருதா, பெற்றோருடன் செல்வதா அல்லது காதலனுடன் செல்வதா என குழப்பத்தில் மூழ்கினார். காதலனுடன் போனால் அம்மா அழுகிறார்.. அம்மா உடன் போனால் காதலன் அழுகிறான் என்ன செய்வது என்று யோசித்தவர், முடிவெடுக்க முடியாமல் தடுமாறினார்.
இதைக்கண்ட போலீசார் அம்ருதாவை பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அம்ருதாவை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி சிவபிரசாத் கேட்டுள்ளார். ஆனால், அவர்களுக்கு திருமணம் ஆகாததால், போலீசார் அவருடன் அம்ருதாவை அனுப்ப மறுத்துவிட்டார்கள். இதனால் அவரது காதலன் சிவபிரசாத் காப்பகத்துக்கு வெளியே கண்ணீருடன் தவித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications