ஏசு சிலை உடைப்பு.. உண்டியல் கொள்ளை.. கிறிஸ்துமஸ் முடிந்ததும் மைசூரில் தேவாலயம் சூறையாடல்.. ஷாக்
பெங்களூர்: கர்நாடகாவின் மைசூரு பகுதியில் தேவாலயத்தில் இருந்த ஏசு சிலையை சேதப்படுத்தி காணிக்கை உண்டியலிலிருந்து பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இவர்களை பிடிக்க காவல்துறையினர் தனிப்படையை அமைத்திருக்கின்றனர்.
கர்நாடக மாநிலத்தின் மசூரில் உள்ள பெரியபட்டிணம் பகுதியில் புனித மரியா தேவாலயம் ஒன்று செயல்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இந்த தேவாலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன. இதனையடுத்து புத்தாண்டுக்கு தேவாலயம் தயாராகி வந்திருக்கிறது. இப்பணிகள் குறித்து பார்வையிட தேவாலய நிர்வாகி ஒருவர் மாலை 6 மணியளவில் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.
ஆனால் அங்கே அவர் கண்ட காட்சிகள் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அதாவது தேவாலயத்தின் பலிபீடத்தில் இருந்த ஏசு சிலை உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது. மற்ற பொருட்கள் அனைத்தும் சிதறி கிடக்கின்றன. ஏசுநாதர் சிலைக்கு முன்னாள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில் யார் இதனை செய்திருப்பார்கள் என்று யோசித்துள்ளார். அப்போதுதான் தேவாலயத்தின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
விசாரணை
எனவே உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. IPC பிரிவு 295 A மற்றும் பிரிவு 380 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதற்கட்டமாக தேவாலயத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய கர்நாடக காவல்துறை தனிப்படையை அமைத்திருக்கிறது. முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் தேவாலயத்தின் பின்பக்க கதவை உடைத்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மைசூர் எஸ்பி சீமா லட்கர் கூறுகையில், "இது திருட்டு வழக்காக இருக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஏனெனில் உண்டியலிருந்த பணம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டிருகிறது" என்று கூறியுள்ளார்.
சர்ச்சைகள்
கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் குறித்த புகார்கள் தொடர்ச்சியாக எழுந்து வந்தன. இந்நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் பின்பற்றப்படும் கட்டாய மதமாற்ற தடுப்பு சட்டம் கர்நாடகாவிலும் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருந்தார். இதனையடுத்து சமீபத்தில் இந்த சட்டம் அம்மாநில சட்டப்பேரவையின் இரண்டு அவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கட்டாய மாதமாற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டார் ஆண்டுக்கு 3-5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.25,000 அபராதமும் விதிக்கப்படும்.
கட்டாய மதமாற்றம்?
அதேபோல 18 வயதினருக்கு கீழ் உள்ளவர்களை மதமாற்றம் செய்தால் அவர்களுக்கு இந்த தண்டனை இரட்டிப்பாக வழங்கப்படும். அதாவது 10 ஆண்டுகள் சிறையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இதே குற்றத்தை அவர்கள் மீண்டும் செய்கையில் தண்டனை கடுமையாக இருக்கும். இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறத்தில் தங்கள் நிகழ்ச்சிகளில் இந்துத்துவ அமைப்புகளின் தலையீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருதாக சிறுபான்மையினர் குற்றச்சாட்டியுள்ளனர். அதேபோல கோயிலுக்குள் தலித் சமூகத்தினருக்கு அனுமதி மறுப்பு, கட்டாய மத மாற்றம் என போலி புகா் ஆகியவையும் அதிகரித்து வருகின்றன. இந்த பிரச்னைகளுக்கு மத்தியில்தான் தற்போது தேவாலயம் சூறையாடப்பட்டிருக்கும் சம்பவமும் அரங்கேறியுள்ளது.
மற்ற மாநிலங்கள்
இதேபோன்று உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியின்போது கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக கூறி ஆயுதங்களுடன் வந்த சிலர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில இடங்களில் சான்டா கிளாஸ் பொம்மைகள் எரிக்கப்பட்டுள்ளன, சான்டா கிளாஸ் வேடமிட்டவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.