தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லை.. பரபரப்பை கிளப்பிய கர்நாடகாவின் டிகே சிவக்குமார்.. ஏன் தெரியுமா?
பெங்களூர்: ‛‛தமிழ்நாடு, ஆந்திரா போன்ற பிற மாநிலங்கள் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது. பெங்களூரில் ஊடகம், சமூக ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதனால் சாலை பள்ளங்கள், போக்குவரத்து நெரிசல் சார்ந்த விஷயங்கள் தலைப்பு செய்தியாக்கப்படுகின்றன'' என்று கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமார் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை பள்ளங்கள் அரசுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர் நகரில் ஐடி உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அந்த நிறுவனங்களின் அதிகாரிகள் போக்குவரத்து நெரிசல், சாலை பள்ளங்கள் குறித்த சமூக வலைதளங்களில் நேரடியாக பதிவுகள் செய்வதால் கர்நாடகா அரசு அடிக்கடி சிக்கலில் சிக்கி கொள்கிறது.
இந்நிலையில் தான் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை பள்ளங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் கிடையாது. ஆனால் கர்நாடகாவில் உள்ளது. இதனால் தான் சாலை பள்ளங்கள், போக்குவரத்து நெரிசல் தொடர்பான செய்திகள் தலைப்பு செய்தியாக்கப்படுகின்றன என்று கூறினார்.
இதுபற்றி டிகே சிவக்குமார் கூறியதாவது: பெங்களூரில் குப்பை பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் பாஜக வெற்றி காணவில்லை. அதேபோல் தான் நாங்களும். ஏனென்றால் எங்களை வேலை செய்யவிடுவது கிடையாது. என்னால் வானத்தையும், பூமியையும் கூட நகர்த்த முடியும். ஆனால் மாபியாக்கள் சார்ந்த விஷயத்தில் முடியவில்லை.
கர்நாடகாவில் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் சுதந்திரமாக உள்ளன. இதனால் கட்டுப்பாடற்ற முறையில் செயல்படுகின்றன. இதன் காரணமாக தான் பிற நகரங்களை ஒப்பிடும்போது குறைவான பள்ளங்கள், மோசமான சாலைகள் இருந்தாலும் அதிகமாக பேசுபொருளாகி விடுகின்றனர். அதுபற்றி தலைப்பு செய்திகள் வருகிறது. ஆனால் தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது.
இங்கே சிலர் மோசமான சாலைகள் பற்றி எடுத்து கூற வேண்டும் என்பதற்காக தங்களின் குழந்தைகளை அழ வைக்கிறார்கள். அது தலைப்பு செய்தியாக வருகிறது. அரசியல்வாதிகளாகிய நாங்கள் இதுபோன்ற விமர்சனங்களை வரவேற்கிறோம். இப்படி சுட்டிக்காட்டினால் தான் எங்களின் தவறுகளை சரி செய்ய முடியும்.
மேலும் மக்களின் விரக்தியை நான் புரிந்து கொள்கிறேன். என் மகள்கள் கூட போக்குவரத்து நெரிசலில் அடிக்கடி சிக்குவதால் என்னை திட்டுகிறார்கள். இருப்பினும் மக்கள் பிரச்சனையை சரிசெய்ய நாங்கள் எங்களின் பணியை சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகிறோம். இந்த பணியை அடுத்த 10 ஆண்டுகளுக்கு மக்கள் நினைவில் வைத்து கொள்வார்கள்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications