பொன்னியின் செல்வன் 2: டயலாக்கே இல்லாமலும் ரசிகர்களை கவர்ந்த ராஷ்ட்டிரகூட இளவரசி மாதுளி.. யார் அவர்?
பெங்களூர்: பொன்னியின் செல்வன் பாகம் 2 பார்த்துவிட்டீர்களா? அதில் முதலில் ராஷ்டிரகூட இளவரசி என ஒரு பெண்ணை காட்டுவார்களே அவர் யார் தெரியுமா?
சைலன்ட் இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் முதலாம் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து அதில் கால சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து எடுத்துள்ளார் மணிரத்னம்.

இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், ரகுமான், நிழல்கள் ரவி, பிரபு, விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் இரண்டாம் பாகம் கடந்த 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இது முதல் பாகத்தின் தொடர்ச்சியாகும். இந்த பாகத்துடன் பொன்னியின் செல்வன் முற்றுப்பெற்றுவிட்டது. இந்த பாகத்தில் நடித்த ஒவ்வொவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நன்றாக நடித்துள்ளார்கள். இந்த படத்தில் நடித்தவர்களில் பெரும்பாலானோர் தெரியும், ஆனால் ஒரு சீனில் வந்த பெண் யாரென தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
அதாவது ராஷ்டிரகூட மன்னனின் மகள் மாதுளி என ஒரு பெண்ணை மதுராந்கனாக நடித்த ரகுமானிடம் காட்டுவார்கள். அந்த பெண்ணை கொண்டு மதுராந்தகனை வளைக்கும் திட்டத்தை ராஷ்டிரகூடர்கள் கையில் எடுத்திருப்பர். அந்த பெண் இரு காட்சிகளில் மட்டுமே நடித்திருப்பார். அவருக்கு எந்த வசனங்களும் இருக்காது. ஆனால் அவரது அழகு ரசிகர்களை ஈர்த்துள்ளது.
அதனால் படம் வெளியானது முதல் அந்த பெண் யார் என சமூகவலைதளங்களில் தேடிவருகிறார்கள். அவர் பெயர் ஸ்ரீமா உபாத்யாயா. இவர் பெங்களூரை சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர். 19 ஆண்டுகளாக அவர் நாட்டிய கலைஞராக உள்ளார். தனது 4 வயதில் நடனமாட தொடங்கிய ஸ்ரீமா தனது தாயிடம் பரதம் பயின்றுள்ளார். இதுகுறித்து ஸ்ரீமா கூறுகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று நேரத்தில் இந்த படம் எடுக்கப்பட்டது.

இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். இந்த படம் ஷூட்டிங் நடப்பது கூட எனக்கு தெரியாது. ஆனால் எப்படியோ என்னை பற்றி தெரிந்து கொண்டார்கள், என்னை ஆட்டிஷனுக்கு அழைத்திருந்தார்கள், ஆனால் அவர்கள் என்னை ஆட்டிஷனுக்கு அழைத்தது வேறு ஒரு கேரக்டருக்காக! அதன் பிறகு மாதுளி கேரக்டர் எனக்கு செட் ஆகும் என இயக்குநர் குழு முடிவு செய்து அந்த வாய்ப்பை எனக்களித்தார்கள்.
நான் ஒரு நடிகை கிடையாது. இதுதான் எனது முதல் முயற்சி. பெரிய பெரிய நடிகர்களின் பெயர் இருக்கும் பட்டியலில் எனது பெயரும் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோரை பார்த்து வளர்ந்தேன். இன்று அவர்கள் பெயர் இடம் பெற்ற அதே பட்டியலில் என் பெயரும் உள்ளது. நான் கன்னடர். ஆயினும் தமிழ் படங்களை பார்த்தே வளர்ந்தேன் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications