பள்ளி குழந்தைகளின் புத்தகப்பை சுமையை குறைக்க.. கர்நாடக அரசு சூப்பர் மூவ்! பாராட்டும் கல்வியாளர்கள்
பெங்களூர்: பள்ளி மாணவர்களின் புத்தக பை எடையை குறைக்க கர்நாடக மாநில அரசு அட்டகாசமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த முடியும் என கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கல்வி ஒவ்வொரு மனிதனுக்கும் ரொம்ப முக்கியம். அடிப்படை கல்வி நிச்சயம் தேவை. ஆனால் இந்த அடிப்படை கல்வி முறை மீது ஏராளமான விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த விமர்சனங்களில் முக்கியமானது, பள்ளி குழந்தைகளின் புத்தக பையின் எடை. பள்ளி செல்லும் குழந்தைகள், கிலோ கணக்கில் புத்தகங்களை சுமந்து செல்வது, அம்மாணவர்களின் கல்வி கற்றல் திறனை வெகுவாக பாதிக்கிறது என பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து கூறி வருகின்றன.

இப்படி பொதியை சுமந்து வரும் மாணவர்கள், பள்ளிக்கு வருவதற்கு முன்னரே சோர்வாகிவிடுகிறார்கள். எனவே கல்வி நேரம் முழுவதிலும் அவர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை என கல்வியாளர்களும், குழந்தைகள் மருத்துவர்களும் தொடர்ந்து கூறி வந்தனர். இதனை சரி செய்ய அரசுகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கை கல்வியாளர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றிருக்கிறது. அதாவது பள்ளி மாணவர்களின் புத்தக பையின் எடையை இம்மாநில அரசு அப்படியே பாதியாக குறைத்திருக்கிறது.
இனி கர்நாடகாவின் 1-10ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டு பருவங்களாக புத்தகங்கள் பிரித்து வழங்கப்படும். அதற்கேற்றார் போல பாட புத்தகங்கள் இரண்டாக பிரிக்கப்படும். இது புத்தக பையின் வெயிட்டை 50 சதவிகிதம் குறைக்கும். இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பள்ளி மாணவர்களின் பாட புத்தக பையின் வெயிட்டை குறைப்பது குறித்து கடந்த 2019ம் ஆண்டு இம்மாநில அரசு, குழு ஒன்றை அமைத்தது. இதில் கல்வி வல்லுநர்கள், குழந்தை மருத்துவர்கள், மருத்துவர்கள், சட்ட ஆலோசகர்கள் மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையின் (DSERT) அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். இந்த குழு மாணவர்களின் கல்வி கற்றல் திறனை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து, மேற்குறிப்பிட்ட நடைமுறையை பரிந்துரைத்திருக்கிறது.
இன்னும் சரியாக சொல்வதெனில், எந்த வகுப்பு மாணவர்கள் எவ்வளவு வெயிட் கொண்ட புத்தக பையை சுமக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான வரையறையையும் இக்குழு வெளியிட்டிருக்கிறது. அதன்படி 1 முதல் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு 1.5 முதல் 2 கிலோ எடை கொண்ட புத்தக பை போதுமானது. இதே 3-5ம் வகுப்பு மாணவர்களுக்கு 2-3 கி.கி, 6-8ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-4 கி.கி மற்றும் 9-10ம் வகுப்புகளுக்கு 4-5 கி.கி எடை கொண்ட புத்தக பை போதுமானது என கூறியுள்ளது.
இந்த குழுவின் பரிந்துரைகள் குறித்து கடந்த அக்.6ம் தேதி பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்கு பின்னர்தான் கர்நாடக பள்ளித் தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியத்தின் இயக்குநர் தலைமையிலான குழு பாடப்புத்தக அளவை 50 சதவீதம் குறைக்க அரசுக்கு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்று வரும் 2024-2025ம் ஆண்டில் பாட புத்தகங்களின் அளவு பாதியாக குறைக்கப்படும் என மாநில அரசு அறிவித்திருக்கிறது.
இந்த மாற்று திட்டத்தால் பாட புத்தகங்களை அச்சிடும், கர்நாடக பாடநூல் சங்கத்திற்கு கூடுதல் செலவாகும். கடந்த 2023-2024 கல்வியாண்டில் ரூ.323 கோடிக்கு பாடநூல் அச்சிடப்பட்டது. தற்போது இந்த புதிய திட்டத்தால் கூடுதலாக ரூ.8.45 கோடி செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications