சூளகிரி லோகுவுக்கு.. பெங்களூரில் பக்கா ஸ்கெட்ச்! கணவனுக்காக காதலனை கொன்ற இளம்பெண் கைது!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் சிக்கபனாவரா-நெலமங்கலா ரயில் நிலையங்களுக்கு இடையே இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து விசாரித்த அம்மாநில போலீசார் தமிழ்நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
கடந்த 19ம் தேதி சடலத்தை போலீசார் கைப்பற்றியிருக்கிறார்கள். ஆனால் உடலில் ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்திருக்கின்றன. இது உடற்கூறாய்விலும் தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முதற்கட்டமாக கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் என்று பதிவான வழக்குகளின் விவரங்களை சேகரித்துள்ளனர். இதில் சூளகிரியை சேர்ந்த லோகு (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்கிற இளைஞரின் புகைப்படம் சடலத்துடன் ஒத்து போயிருக்கிறது. இதனையடுத்து வழக்கு விசாரணை சூடுபிடித்தது. லோகு காணாமல் போனதாக சொல்லப்பட்ட தினத்தில், அவர் வசித்து வந்த பகுதியில் இருந்த கடைகள், பேருந்து நிறுத்தங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர்.
அவர் இளம்பெண் ஒருவருடன் பேருந்தில் ஏறி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து இளம்பெண்ணை காவல்துறை விசாரிக்க தொடங்கியது. விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது இளம்பெண் லோகுவை விட 3 வயது மூத்தவர். இருப்பினும் சமீப காலமாக இவர்கள் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆனால், இளம்பெண் இந்த உறவிலிருந்து கட்டாயமாக தன்னை விலக்கிக்கொண்டிருக்கிறார்.
இளம்பெண்ணின் நடத்தையில் சந்தேகமடைந்த லோகு, அவரை பின்தொடர்ந்திருக்கிறார். அப்போதுதான் இளம்பெண்ணுக்கும் அவரைவிட 4 வயது குறைவான இளைஞருக்கும் திருமணம் நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த விஷயம் லோகுவுக்கு தெரிய வந்ததையடுத்து அவருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே பிரச்சனை வெடித்திருக்கிறது. பின்னர் ஒரு வழியாக சமாதானம் பேசியிருக்கிறார்கள். பிரச்சனை இனி வேண்டாம். இதற்கு இறுதியாக ஒரு தீர்வை காண்போம் என்று பேசி லோகுவை இளம்பெண் பெங்களூருக்கு அழைத்து வந்திருக்கிறார். அங்குதான் இளம்பெண்ணின் கணவர் இருந்திருக்கிறார். இளம்பெண்ணும், அவரது கணவரும் சேர்ந்து லோகுவை கொலை செய்திருக்கிறார்கள்.
பின்னர் சடலத்தை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அவர்கள், அதை ரயில் தண்டவாளத்தில் வீசியிருக்கிறார்கள் என்று கர்நாடக மாநில காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications