திணறும் பாஜக.. கர்நாடகாவில் “கன்பியூசன்” - ஜெகதீஷ் ஷெட்டர் பெயர் மிஸ்ஸிங்! 5 எம்எல்ஏக்களுக்கு கல்தா
பெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான பாஜகவின் வேட்பாளர் பட்டியல் 2 கட்டங்களாக வெளியிடப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்து இருக்கும் நிலையில், இன்று 2 வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகும் 12 தொகுதிகளை மிச்சம் வைத்துள்ளது பாஜக. அதிலும் குறிப்பாக கர்நாடக பாஜகவில் பல்வேறு குழப்பங்களை வேட்பாளர் பட்டியல் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் ஆளும் பாஜக, 189 வேட்பாளர்களை கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்த நிலையில் இன்று 2 வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நள்ளிரவு வெளியிட்டு உள்ளது. இன்றோடு அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் இதைதான் அறிவித்து இருந்தார். ஆனால், வெறும் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மட்டுமே அறிவித்து இருக்கும் பாஜக, இன்னும் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்காமல் மிச்சம் வைத்து உள்ளது. உட்கட்சிப் பூசல்களால் வேட்பாளர்கள் தேர்வில் பல்வேறு குழப்பங்கள் பாஜகவில் நிலவுவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அது உண்மைதானோ என்ற கேள்வியை எழுப்புகிறது இன்று வெளியான வேட்பாளர் பட்டியல்.
இதில் குறிப்பாக தற்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து வரும் சுகுமார் ஷெட்டி, மடால் வீரபக்ஷப்பா, நிம்பன்னவர், லிங்கன்னா, குமாரசாமி ஆகிய 5 பேருக்கு இம்முறை வாய்ப்பு மறுத்து உள்ளது. இவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து வரும் காலகடாகி, ஹவேரி, மாயகோண்டா, சன்னாகிரி, பைந்தூர் தொகுதிகளில் வேறு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளார்கள்.
அதேபோல் பாஜக மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிட விரும்பிய ஹுப்பாலி தொகுதியில் இன்னும் வேட்பாளரை பாஜக அறிவிக்கவில்லை. அரசியலை விட்டு சற்று ஒதுங்கி இருந்த ஜெகதீஷ் ஷெட்டருக்கும் பாஜக தலைமைக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இம்முறை மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்பிய ஷெட்டர் தனக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்று எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹுப்பாலி தொகுதியில் அதிக செல்வாக்கு உள்ள ஜெகதீஷ் ஷெட்டர் 6 முறை அங்கு வெற்றிபெற்று உள்ளார். இன்று பாஜக வெளியிட்டு உள்ள 23 வேட்பாளர்களில் 3 பேர் பெண்கள். இதில் குறிப்பாக அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நாகராஜா சப்பி கல்காட்கி தொகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளார். தனித் தொகுதியான கோலார் தங்க சுரங்கம் (KGF)யில் அஸ்வினி சம்பங்கி பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் உறவினரான என்.ஆர்.சந்தோஷுக்கு இம்முறை பாஜக வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெயரும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. அதே நேரம் எடியூரப்பாவின் மகனான விஜயேந்திராவுக்கு பாஜக சீட் வழங்கி உள்ளது. 2 கட்ட வேட்பாளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குழப்பங்களை தீர்க்கும் வகையில் 12 வேட்பாளர்களை கொண்ட மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இருக்கும் என்று நம்புகிறார்கள் கர்நாடக தாமரைகள்.












Click it and Unblock the Notifications