மாஸ் பெங்களூர்.. ஓசூர் ரோட்டுக்கு இனி வேகமாக போகலாம்.. பயன்பாட்டுக்கு வந்த முதல் இரட்டை மேம்பாலம்
பெங்களூர்: தென்இந்தியாவின் முதல் நீளமான இரட்டை அடுக்கு மேம்பாலம் பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.449 கோடி செலவில் 5.12 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தில் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது. இந்த மேம்பாலத்தில் பயணிப்பதன் மூலம் ஓசூர் ரோட்டை எளிதாக அடைவதோடு சென்ட்ரல் சில்க் போர்ட் டிராபிக்கில் இருந்து முழுவதுமாக தப்பிக்கலாம்.
பெங்களூரில் ஆண்டுதோறும் குடியேறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதோடு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பெங்களூரில் பல்வேறு புதிய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. பூமிக்கடியில் சுரங்கபாதை அமைத்து வாகனங்களை இயக்கும் திட்டம், இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைத்தல், அவுட்டர் ரிங் ரோடு திட்டம் என பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழலில் தான் தென்னிந்தியாவின் முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது மேம்பாலத்தில் வாகனங்கள் செல்லும் நிலையில் அதற்கு மேலே உள்ள மெட்ரோ பாதைகளில் மெட்ரோ ரயில்கள் இயங்க உள்ளன. மேலும் வாகனங்கள் செல்லும் மேம்பாலத்துக்கு அடியில் செல்லும் சாலையிலும் பிற வாகனங்கள் செல்ல உள்ளன.
இந்த இரட்டையடுக்கு மேம்பாலம் என்பது பெங்களூர் ராகிகுட்டாவில் இருந்து சென்ட்ரல் சில்க் போர்ட் வரை மொத்தம் 5.12 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் ரூ.449 கோடியில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.
இரட்டை அடுக்கு மேம்பாலத்தின் முக்கிய பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் எச்எஸ்ஆர் லே-அவுட்டில் இருந்து ராகிகுட்டா மற்றும் பிடிஎம் லே-அவுட் பகுதிகளை இணைக்கும் சாய்வுதளம் தொடர்பான பணிகள் மட்டும் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. இந்த பணிகள் 2025ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் இந்த இரட்டையடுக்கு மேம்பாலத்தில் நேற்று சோதனை ஓட்டம் தொடங்கியது. கர்நாடகா துணை முதல்வரும், பெங்களூர் நகர அபிவிருத்தி துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் இரட்டையடுக்கு மேம்பாலத்தில் கார் ஓட்டி சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியும் இருந்தார். இந்த இரட்டையடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டு இருப்பதன் மூலம் சென்ட்ரல் சில்க் போர்டு பகுதியில் போக்குவரத்து என்பது பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.
இதுபற்றி பெங்களூர் மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், ‛‛ புதிய மேம்பாலத்தில் ராகிகுட்டாவில் இருந்து எச்எஸ்ஆர் லே-அவுட் மற்றும் ஓசூர் சாலைக்கு சிக்னல் ப்ரீ முறையில் வேகமாக செல்ல முடியும். இந்த மேம்பாலம் என்பது கேஆர் புரம், ஓசூர் ரோட்டுக்கு வேகமாக செல்ல மக்களுக்கு வழிவகுக்கும். இதன்மூலம் முந்தைய பயண நேரம் 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது'' என்றனர்.











Click it and Unblock the Notifications