பாஜகவுக்கு தலைவலி.. கர்நாடகாவில் லிங்காயத் மடாதிபதி போர்க்கொடி.. மத்திய அமைச்சருக்கு எதிராக போட்டி!
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை எதிர்த்து லிங்காயத் மடாதிபதி திங்கலேஸ்வர சுவாமி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. கர்நாடகாவில் இரண்டு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 7ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒன்று தார்வாட் தொகுதி. இங்கு பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பிரகலாத் ஜோஷிக்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி போட்டியிடும் தார்வாட் தொகுதியில் அவரை எதிர்த்து களமிறங்குகிறார் லிங்காயத் மடாதிபதியான திங்களேஸ்வர சுவாமி.
கர்நாடக மாநிலத்தின் ஷிரஹட்டி பக்கிரேஷ்வர் மடத்தின் தலைவராக இருப்பவர் பகிரா திங்கலேஸ்வர் ஸ்வாமி. வீரசைவ லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த பிரபல சாமியாரான இவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தார்வாட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
தார்வாட் தொகுதியின் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகலாத் ஜோஷியை கடுமையாக விமர்சித்துள்ள திங்களேஸ்வர சுவாமி, வீர சைவ லிங்காயத் மற்றும் பிற சமூகங்களை பிரகலாத் ஜோஷி ஒடுக்குவதாகவும், லிங்காயத் மடங்களை தவறாகப் பயன்படுத்தி அவமரியாதையை ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.
சாதிகளுக்கு இடையே பாஜக பாகுபாடு காட்டுவதாகவும், சுயமரியாதையை காப்பாற்றுவதற்காக தான் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் கூறியுள்ளார் லிங்காயத் மடாதிபதி திங்கலேஸ்வர் சுவாமி. இதனால், கர்நாடகாவில் பாஜகவுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
தார்வாட் பகுதியைச் சேர்ந்த சில சாமியார்கள், குறிப்பாக லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த சாமியார்கள் கடந்த மாதம் 27ஆம் தேதி திங்கலேஷ்வர் ஸ்வாமி தலைமையில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். அப்போது, தார்வாட் மக்களவை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் பிரகலாத் ஜோஷியை மாற்றவேண்டும் என பாஜக தலைமையை வலியுறுத்தினர்.
ஆனால், பாஜக தலைமை இதனை கண்டுகொள்ளாத நிலையில், பிரகலாத் ஜோஷியை எதிர்த்து தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் திங்களேஸ்வர் சுவாமி. கர்நாடகாவில் பல தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த தலைவர் பாஜகவுக்கு எதிராக களமிறங்கியுள்ளதால் தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications