சசிகலாவை திடீரென்று சந்தித்தது ஏன்? டிடிவி தினகரன் பரபர விளக்கம்!
பெங்களூரில் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்தது ஏன் என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
பெங்களூர்: பெங்களூரில் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்தது ஏன் என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர்கள் டிடிவி தினகரனுடன் சேர்ந்து இன்று பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்தனர். சுமார் 20 நிமிடம் இவர்கள் சசிகலாவுடன் உரையாடினார்கள்.
அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி விலகி உள்ள நிலையில் திடீர் என்று இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த சந்திப்பு ஏன் நிகழ்ந்தது, சசிகலாவை சந்தித்தது ஏன் என்று அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
பெரிய வளர்ச்சி
பெங்களூரில் அவர் அளித்த பேட்டியில், என்னுடைய வளர்ச்சியை பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள். ஆளும்கட்சி மட்டுமில்லாமல் எதிர்க்கட்சியும் எங்களை பார்த்து பயப்படுகிறார்கள் அமமுகவில் யாரும் அதிருப்தியில் இருப்பது போல தெரியவில்லை.ஒரு சிலர் அமமுகவை விட்டு சென்றதால் எந்த பாதிப்பும் இல்லை.
காரணம் என்ன
ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வீண் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. சிலர் விலகிவிடுவதால் கட்சி போய்விடும் என்றால், உலகத்தில் எந்த கட்சியும் இருக்காது. 6 மாதமாக சசிகலாவை யாரும் சந்திக்கவில்லை, அதனால் பார்க்க வந்தோம். எல்லோரும் சசிகலாவை பார்க்க ஆசைப்பட்டோம் அதனால் பார்க்க வந்தோம்.
விஸ்வரூபம் எடுப்பேன்
அமமுகவின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. என்னுடைய விஸ்வரூபத்தை யாராலும் தடுக்க முடியாது. செந்தில் பாலாஜி நான்கு மாதங்களுக்கு முன்பே வெளியேற முடிவெடுத்துவிட்டார். அப்போதே என்னிடம் சிலர் இதுகுறித்து தெரிவித்தனர். ஆனால் நான் நம்பவில்லை.
எல்லாம் பொய்
தினமும் அமமுகவை விட்டு பலர் வெளியே செல்வதாக செய்திகள் வருகிறது. தினமும் 1000 பேர் சென்றுவிட்டார் , 2000 பேர் சென்றுவிட்டார்கள் என்று கூறுகிறார்கள். எல்லாம் பொய். எங்கள் கட்சியில் ஒரு கோடி பேர் இருக்கிறார்கள். அந்த அதிர்ச்சியில் விஷமிகள் இப்படி பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.
நாங்கள்தான் வெற்றி
அதிமுகவினர் தோல்வி அடைந்த பிறகு எங்களிடம் வந்தால் சேர்த்துக் கொள்ள மாட்டோம். வர வேண்டும் என்றால் இப்போதே எங்களிடம் வந்து சேர்ந்துவிடுங்கள். நாங்கள்தான் இடைத்தேர்தலில் வெற்றிபெற போகிறோம் என்று அதிமுக, திமுக, பாஜக, உளவுத்துறை என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் இப்போதே எங்களிடம் வந்துவிடுங்கள் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.