கர்நாடகாவுக்கு சுற்றுலா போன திருச்சி மருத்துவ மாணவிகள்.. கடலில் குளித்த போது நடந்த பெரும் துயரம்
பெங்களூர்: தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்ற மருத்துவ மாணவிகள் இருவர் அரபிக்கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். இதில், கோகர்ணா பகுதியில் கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த போது கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
கோடைக்காலம் தொடங்கிவிட்டதாலும் பள்ளிகள், கல்லூரிகளில் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் பலரும் குளிர்ச்சியான பகுதிகள், மலைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்று வருகிறார்கள். கோடைக்கால விடுமுறையில் ஜில் செய்வதற்காக சுற்றுலா தலங்களை நோக்கி பலரும் படையெடுக்கிறார்கள். அப்படித் தான் திருச்சி எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக மருத்துவ மாணவிகள் கர்நாடகாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு எடுத்துள்ளனர்.

சுற்றுலா சென்ற மருத்துவ மாணவிகள்
இதன்படி, திருச்சி எஸ். ஆர். எம் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு தேர்வை எழுதி முடித்த மாணவர்கள் 23 பேர் சுற்றுலா சென்றுள்ளனர். கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று முன் தினம் சுற்றுலாவுக்கு கிளம்பிய நிலையில் தண்டேலி, அங்கோலோ உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தனர். தொடர்ந்து நேற்று அவர்கள் கோகர்ணாவுக்கு சென்று இருந்தார்கள்.
இதில் நேற்று மாலை நேரத்தில் குட்லே கடற்கரைக்கு சென்று இருந்தனர். அப்போது மாணவிகள் சூரிய அஸ்தமனம் ஆவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். தொடர்ந்து கடலில் இறங்கி குளித்து ஆடிப்பாடி மகிழ்ந்துகொண்டிருந்தனர். இதில் எதிர்பாராத விதமாக இந்துஜா என்ற மாணவியும், கனிமொழி என்ற மாணவியும் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டனர். உடனே இருவரும் கடலில் மூழ்கி அபயக்குரல் எழுப்பினர்.
இருவரும் உயிரிழப்பு
தொடர்ந்து இருவரும் கடலில் மூழ்கி தத்தளித்தனர். மற்ற மாணவிகள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தி சத்தமிட்டனர். இதைக் கேட்டு தூரத்தில் இருந்து மணி ராஜ் என்பவர் ஓடி வந்து அரபிக் கடலில் மூழ்கிய மாணவிகள் இருவரையும் மீட்க போராடினார். ஆனால் அவரால் முடியவில்லை. இதற்கிடையே மணி ராஜூம் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு தண்ணீரில் தத்தளித்தார். இதேபோல் இவர்களை அழைத்து வந்தவர்களும் உடனடியாக மீட்பு குழுவினர் உதவியை நாடினர்.
இதையடுத்து தகவலின் பேரில், குட்லே கடற்கரை சாகச படகு குழுவினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடலில் மூழ்கிய மாணவிகள் இருவர், மணிராஜை மீட்க போராடினர். இதில் மணி ராஜ் உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால் மாணவிகள் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதை தொடர்ந்து இருவரையும் மீட்பு குழுவினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்ததில் மாணவிகள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
வழக்கு பதிவு செய்து விசாரணை
இதனை தொடர்ந்து மாணவிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கோகர்ணா போலீசார் தர்மபுரியை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியான சிவக்குமார் மற்றும் சென்னை வெற்றி டிராவல்ஸ் உரிமையாளர் செல்வன் ஆகியோர் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழக மருத்துவ மாணவிகள் கர்நாடகாவில் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications