சென்னை மாதிரி கர்நாடகாவில் ஊரடங்கா.. நெவர்.. பொருளாதாரத்தை மீட்பதே எங்கள் இலக்கு- எடியூரப்பா அதிரடி
பெங்களூர்: கர்நாடகாவில் முழு ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில், தமிழக அரசு ஜூன் 19-ஆம் தேதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கும் சில மாவட்டங்களில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுமா என்று கேள்விகள் எழுந்தன.
குறிப்பாக, பெங்களூரு மாவட்டம் உள்ளிட்ட சில நகர்ப்புறப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் இன்று அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் எடியூரப்பா.
மாநிலத்தில் நிலவக்கூடிய கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி தினமும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் எடியூரப்பா. இன்றைய ஆலோசனைக் கூட்டத்திலும் பிற மாநிலங்களில் இருந்து கர்நாடக வருவோருக்கு விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
பெங்களூரில் சுமார் 30% கேஸ்கள் வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களுக்கு செல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் தமிழகம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் இருந்து பெங்களூரு வருவோர் வீட்டில் தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளாமல் சமூகத்தினருடன் கலந்து பழகுவதுதான் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவேதான், தமிழகத்துக்கான விதிமுறையை மாற்றியுள்ளது கர்நாடக அரசு. தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து வருவோர் மூன்று நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பிறகுதான் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று உத்தரவை மாற்றியுள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா, கர்நாடகாவில் முழு ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதுதான் இப்போது எங்களின் முதல் பணியாக இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க தேவையான உதவிகளை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு பேச உள்ளேன் என்று தெரிவித்துள்ளார் எடியூரப்பா.












Click it and Unblock the Notifications