"3000 ஆபாச வீடியோ பிரஜ்வல் ரேவண்ணா" சகோதரர் சூரஜ் மீது ஓரின சேர்க்கை புகார்- பணம் பறிக்க நாடகமா?
பெங்களூர்: தேவகவுடாவின் பேரன்களில் ஒருவரான சூரஜ் ரேவண்ணா எம்.எல்.சி மீது ஜேடிஎஸ் கட்சித் தொண்டர் ஒருவர் ஓரினச் சேர்க்கை புகார் தெரிவித்திருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவகவுடாவின் மற்றொரு பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஏற்கனவே 3,000 ஆபாச வீடியோ விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா அரசியலில் ஜேடிஎஸ் கட்சியானது காங்கிரஸ், பாஜகவுக்கு அடுத்த நிலையில் உள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் குடும்பத்தின் கட்சி இது. காங்கிரஸ், பாஜக ஆதரவுடன் தேகவுடாவின் மகன் குமாரசாமி முதல்வராக இருந்துள்ளார். தற்போது மத்திய அமைச்சராக பதவி வகிக்கிறார் குமாரசாமி.

லோக்சபா தேர்தலின் போது தேவகவுடாவின் மற்றொரு மகன் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணாவின் 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையானது. ஹாசன் லோக்சபா தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டிருந்தார். ஆபாச வீடியோ வெளியான நிலையில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார் பிரஜ்வல். லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் நாடு திரும்பிய பிரஜ்வல் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
தற்போது தேவகவுடாவின் மற்றொரு பேரன் சூரஜ் ரேவண்ணா கர்நாடகா மேல்சபை உறுப்பினர் எம்.எல்.சியாக உள்ளார். சூரஜ் ரேவண்ணா மீது ஜேடிஸ் தொண்டர் ஒருவர் ஓரினச் சேர்க்கை புகார் கொடுத்துள்ளார். சூரஜ் ரேவண்ணாவின் தந்தை ரேவண்ணா எம்.எல்.ஏ.வும் பிரஜ்வல் வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
ஹாசன் மாவட்டம் அர்க்கல்கோடு தாலுகா கொல்லங்கி கிராமத்தைச் சேர்ந்த சேத்தன் என்ற ஜேடிஎஸ் தொண்டர்தான் சூரஜ் ரேவண்ணா மீது ஓரினச் சேர்க்கை புகார் கொடுத்துள்ளார். சூரஜ் ரேவண்ணா தம்மை ஓரினச் சேர்க்கைக்கு அழைப்பதாகவும் இது பற்றி வெளியே சொல்லாமல் இருந்தால் ரூ5 கோடி தருவதாகவும் ஆசைவார்த்தை காட்டினார் எனவும் சேத்தன் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
ஆனால் சேத்தன் மீது சூரஜ் ரேவண்ணாவின் நெருங்கிய நண்பரான சிவக்குமார் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், சூரஜ் ரேவண்ணாவிடம் மனைவிக்கு வேலை கேட்டு வந்தார் சேத்தன். மனைவிக்கு வேலை வாங்கி தராவிட்டால் பிரஜ்வல் ரேவண்ணாவை ஜெயிலுக்கு அனுப்பியது போல ஓரினச் சேர்க்கை புகார் கொடுத்து சிறைக்கு அனுப்புவேன்; அதனால் தமக்கு ரூ5 கோடி தர வேண்டும் என மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ரூ5 கோடி கேட்ட சேத்தன் பின்னர் ரூ1 கோடி வரை இறங்கி வந்ததாகவும் அப்புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையிலும் சேத்தன், அவரது மனைவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications