ஆர்டிஐ சட்டத்தின் கீழ் என்னை பற்றிய தகவல்களை அளிக்கக் கூடாது- சசிகலா மனு
பெங்களூர்: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் என்னை பற்றிய தகவல்களை அளிக்கக் கூடாது என சசிகலா பெங்களூர் சிறைத் துறையினருக்கு மனு அளித்துள்ளார்.
இதையேற்ற சிறைத்துறை நிர்வாகம் பெங்களூரைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தியின் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வருகிறார்.
சசிகலா முன்கூட்டியே விடுதலையாவார் என தகவல்கள் பரவிய நிலையில் அவர் எப்போது விடுதலையாவார் என பெங்களூரைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.

கர்நாடக சிறைத் துறை
அவர் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாவார் என்றும் ஒரு வேளை அபராதத் தொகையை கட்ட தவறினால் அவர் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கர்நாடக சிறைத் துறை தகவல் அளித்தது. இந்த நிலையில் சசிகலாவுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நரசிம்மமூர்த்தி கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் தன்னை பற்றிய தகவல்களை வெளியிடக் கூடாது என சசிகலா சிறைத் துறைக்கு மனு அளித்துள்ளதாக தெரிகிறது.

3ஆவது நபர்
அந்த மனுவில் சசிகலா கூறியிருப்பதாவது: என்னுடைய சிறை தண்டனை, நான் விடுதலை ஆகும் தேதி உள்ளிட்ட மற்ற தகவல்களை 3ஆவது நபர் ஒருவர் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் ஒருவர் சேகரிக்க முற்படுகிறார் என்பதை நான் அறிந்தேன். விளம்பரம், அரசியல் காழ்ப்புணர்ச்சி, உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த 3ஆவது நபர் அந்த என்னை பற்றிய தகவல்களை கேட்டு விண்ணப்பங்களை அளித்திருக்கலாம்.

ஆர்டிஐ சட்டம்
இந்த நேரத்தில் என்னுடைய விடுதலையை சிக்கல் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இது போன்ற விண்ணப்பங்களை அவர்கள் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தாக்கல் செய்கிறார்கள் என நான் கருதுகிறேன். வேத் பிரகாஷ் ஆர்யாவ்ஸ் என்ற விசாரணை கைதி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சுப்ரீம் கோர்ட்
அவரை குறித்த தகவல்களை ஒருவர் அறிய விரும்பி ஆர்டிஐ சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் திகார் சிறையின் பொது தகவல் அதிகாரி இந்த தகவல்களை அவருக்கு அளிக்க மறுத்துவிட்டார். விசாரணை கைதிகள் மற்றும் கைதிகள் குறித்த அனைத்து தகவல்களும் தனிப்பட்ட முறையில் இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் இவை தனிப்பட்ட உரிமைகள் என்பது அடிப்படை உரிமை என சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையும் அந்த அதிகாரி மேற்கோள்காட்டியிருந்தார்.

பதிலளிக்க மறுப்பு
எனவே என்னை பற்றிய தகவல்களையோ சிறை தண்டனை குறித்த விவரங்களையோ அளிப்பது எனது தனியுரிமையில் நுழைவதற்கு வழிவகுக்கும். எனவே என்னுடைய விடுதலை தேதி, சிறை தண்டனை உள்ளிட்ட விவரங்களை 3ஆவது நபருக்கு, அதுவும் இந்த வழக்கில் தொடர்பில்லாத நபருக்கு தெரிவிக்கக் கூடாது என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என அந்த கடிதத்தில் சசிகலா தெரிவித்துள்ளார். இதையேற்ற சிறைத் துறை நிர்வாகம் நரசிம்மமூர்த்தியின் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications