கர்நாடகாவில் விழுந்தது முதல் விக்கெட்! அதிகாரி தற்கொலை விவகாரத்தில் அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா!
பெங்களூர்: கர்நாடகா வால்மீகி வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரி சந்திரசேகர் தற்கொலை விவகாரத்தில் அமைச்சர் நாகேந்திரா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார் நாகேந்திரா.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸுக்கு பெரும் தலைவலியாகவும் நெருக்கடியாகவும் உருவெடுத்தது வால்மீகி வளர்ச்சி ஆணைய அதிகாரி சந்திரசேகர் தற்கொலை. பெங்களூர் வசந்த்நகரில் உள்ளது வால்மீகி வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரியாகப் பணியாற்றிய சந்திரசேகர்( வயது 52) ஷிமோகாவில் உள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சந்திரசேகர் தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதிய கடிதத்தில், வால்மீகி சமூக வளர்ச்சி ஆணையத்துக்கு மாநில அரசு ரூ187 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆணையத்தின் 3 அதிகாரிகள் ரூ85 கோடியை பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி சுருட்டிக் கொண்டனர். இது குறித்து அதிகாரி என்ற முறையில் அவர்களிடம் கேட்டேன். இதற்காக எனக்கு பெரும் தொல்லை கொடுத்தனர். இதனால் மனமுடைந்து நான் தற்கொலை செய்கிறேன் என எழுதி இருந்தார்.
அதிகாரி சந்திரசேகரின் மரணத்தைத் தொடர்ந்து அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக, ஜேடிஎஸ் கட்சியினர் வலியுறுத்தினர். ஆனால் நாகேந்திரா ராஜினாமா செய்ய மறுத்தார். இதனால் நாகேந்திராவை ராஜினாமா செய்ய கடந்த வாரம் முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். இதனை உடனே நாகேந்திரா ஏற்கவில்லை. இந்த நிலையில் நேற்று முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார் நாகேந்திரா.
முன்னதாக நாகேந்திரா கூறுகையில், வால்மீகி வளர்ச்சி ஆணைய அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களது கையெழுத்து போலியாகப் போடப்பட்டுள்ளது என்கின்றனர். இந்த முறைகேட்டுக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை எனக் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications