காவிரி: கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசலைனா... ரஜினிகாந்துக்கு மீண்டும் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை
பெங்களூர்: காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் குரல் கொடுக்காவிட்டால் அவரது திரைப்படங்களை திரையிடவிட மாட்டோம் என்று கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு எதிரான காவிரி நதிநீர் போராட்டங்களில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடியவர் வாட்டாள் நாகராஜ். தமிழ்நாட்டுக்கு எதிரான வன்முறை போராட்டங்களைத் தூண்டிவிடக் கூடியவர் வாட்டாள் நாகராஜ்.

கர்நாடகா பந்த்: தற்போதைய காவிரி பிரச்சனையில் கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் இணைந்து பெங்களூர் பந்த் போராட்டத்தை நடத்தின. இதில் வாட்டாள் நாகராஜூக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. இதனால் பெங்களூர் பந்த் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார் அவர். அத்துடன் தமக்கு வேண்டிய அமைப்புகள் ஆதரவுடன் கர்நாடகா பந்த் போராட்டம் நாளை நடைபெறும் என அறிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் காவிரி டெல்டா சாராத பகுதி மக்கள் எப்படி ஆதரவு தருவார்கள் என்பது கேள்விக்குறியான ஒன்றுதான்.
வாட்டாள் நாகராஜ் கைது: அத்துடன் பெங்களூரில் நாள்தோறும் ஏதேனும் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டு லைம் லைட்டில் இருக்க விரும்புகிறார் வாட்டாள் நாகராஜ். பெங்களூரில் நேற்று முதல்வர் சித்தராமையா இல்லத்தை முற்றுகையிடும் போராடத்தை வாட்டாள் நாகராஜ் நடத்தினார். ஆனால் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
நாளை பந்த் போராட்டம்: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வட்டாள் நாகராஜ், காவிரியில் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரை கூட எந்த காரணத்தை சொல்லியும் திறந்துவிடக் கூடாது. கன்னட சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக கர்நாடகா பந்த் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
ரஜினிகாந்துக்கு எச்சரிக்கை: நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் இருந்தாலும் கர்நாடகாவில் இருந்த் போது காவிரி நீரை குடித்தவர். ஆகையால் கர்நாடகாவுக்கு ஆதரவாகத்தான் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும். காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் பேச வேண்டும். கர்நாடகாவில் வறட்சி நிலவும் சூழ்நிலையை ரஜினிகாந்த் விளக்க வேண்டும். அப்படி ரஜினிகாந்த் செய்யாவிட்டால் அவரது திரைபப்டங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றார். ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார் வாட்டாள் நாகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications