கர்நாடகா பாஜக தலைவர்..ஜெயித்த 'லிங்காயத்' விஜயேந்திரா.. ஏமாந்த 'ஒக்கலிகா' சி.டி ரவி ஒரே ஒப்பாரி!
பெங்களூர்: கர்நாடகா பாஜக தலைவர் பதவியை அப்பா தயவில் பெற்றுவிட்ட கெத்தில் கொண்டாடி மகிழ்கிறார் எடியூரப்பா மகன் விஜயேந்திரா. இன்னொரு பக்கம் பாஜக தலைவர் பதவியை எதிர்பார்த்து ஏமாந்த முன்னாள் அமைச்சர் சிடி ரவி ஆதரவாளர்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர் என்கின்றன அம்மாநில அரசியல் வட்டாரங்கள்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து நளின் குமார் கட்டீல் ராஜினாமா செய்தார். உடனடியாக கர்நாடகா பாஜக மாநில தலைவர் பதவியை டெல்லி மேலிடம் நிரப்பவும் இல்லை. கடந்த 7 மாதங்களாக கர்நாடகா பாஜக தலைவராக யாரை நியமிப்பது என்கிற குழப்பத்தில் டெல்லி மேலிடம் இருந்து வந்தது.

மிரட்டி சாதித்த எடியூரப்பா: தற்போது லிங்காயத் ஜாதியை சேர்ந்த விஜயேந்திராவை வெற்றிகரமாக மாநில பாஜக தலைவராக அறிவித்துவிட்டது பாஜக மேலிடம். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா. லிங்காயத்து வாக்குகளைப் பெற்றுத் தருவோம் என்ற மிரட்டல் யுக்தியை கையில் எடுத்துதான் எடியூரப்பா, மகனுக்கு இந்த பதவியைப் பெற்றுத் தந்திருக்கிறார் என்பது கர்நாடகா அரசியலை புரிந்தவர்களுக்கு வெட்ட வெளிச்சம்.
சி.டி.ரவி அதிருப்தி?: இப்போது பாஜக தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்த மற்றொரு பெரும்பான்மை ஜாதியான 'ஒக்கலிகா கவுடா' சிடி ரவியை மையமாக வைத்து அதிருப்தி குரல்கள் வெளிப்பட தொடங்கி இருக்கின்றன. விஜயேந்திரா நியமனத்தில் சிடி ரவி ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியை கொட்டவும் தொடங்கிவிட்டனர். ஆனால் சிடி ரவியோ இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறார். விஜயேந்திரா நியமனம் தொடர்பாக சிடி ரவி கூறியதாவது: விஜயேந்திராவுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துள்ளேன். இது அதிகாரம் தொடர்புடைய பதவி அல்ல. பொறுப்பு தொடர்புடைய பதவி. பாஜகவில் எந்த ஒரு பதவிக்கும் நான் விரும்பியதும் இல்லை.. போட்டியில் இருந்ததும் இல்லை. எனக்கு என எந்த பதவியும் கேட்டதும் இல்லை. 25 ஆண்டுகளாக பாஜகவில் இப்படித்தான் பணியாற்றுகிறேன். என் கட்சித் தலைமை எனக்கு தருகிற பணியை நிறைவேற்றுவதுதான் என் கடமையாக கருதுகிறேன். இதில் அதிருப்தி, மன வருத்தம் என்ற பேச்சுக்கு எல்லாம் இடமே இல்லை.
எனக்கும் கேள்விகள் இருக்கே..: விஜயேந்திராவின் நியமனத்தை வாரிசு அரசியல் என்றெல்லாம் செய்தியாளர்கள் கேட்கின்றனர். இப்போது நான் எது பேசினாலும் ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்படும். என்னுடைய பழைய வீடியோக்களை ஒளிபரப்பு செய்து விவாதிப்பீர்கள். எனக்கும் ஏகப்பட்ட கேள்விகள் இருக்கின்றன. அதே போல உங்களுக்கும் ஏகப்பட்ட கேள்விகள் இருக்கவே செய்கின்றன. என்னுடைய கட்சிக்கு எதிராக நான் சிந்தித்து இல்லை. நான் எது சொன்னாலும் உங்களுக்கு பிரேக்கிங் செய்திதான். விஜயேந்திரா நியமனத்தை முன்வைத்து கொண்டாட்டங்கள் நடைபெறும் நிலையில் நான் கருத்து தெரிவித்து யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. என்னைப் போன்ற தொண்டர்களுக்குள் இருக்கிற கேள்விகளை எல்லாம் பொதுவெளியில் விவாதிக்க முடியாது. இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.












Click it and Unblock the Notifications