நள்ளிரவில் பரிசு பொருட்கள்! பாஜக பிரமுகர் வீட்டிலேயே வீசி எறிந்த மக்கள்! எடியூரப்பா கிராமத்தில் பரபர
பெங்களூர்: கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் சமயத்தில் பாஜக பிரமுகர் அளித்த பரிசுப் பொருட்களைப் பொதுமக்கள் திரும்ப அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் கடந்த புதன்கிழமை சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கே மொத்தம் இருக்கும் 224 தொகுதிகள், இருக்கும் நிலையில் அங்கே ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.

அங்கே ஓரிரு இடங்களைத் தவிர பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றது. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்பதால் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று தீவிரமாக முயல்கின்றனர்.
கர்நாடக தேர்தல்: அங்கே புதன்கிழமை ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு, கே.ஆர்.பேட்டை சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பாஜகவினர் சேலைகள் மற்றும் உயிருள்ள கோழிகளை விநியோகம் செய்துள்ளனர். மறுநாள் புதன்கிழமை வாக்குப்பதிவு நடந்த நிலையில், அப்போது இது குறித்து காங்கிரசார் கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து எடியூரப்பாவின் சொந்த ஊரான கஞ்சிகெரே கிராம மக்கள் இந்த இலவச பொருட்களைத் திரும்பியும் அளித்துள்ளனர்.
புதன்கிழமை காலை, உள்ளூர் பாஜக பிரமுகர் ஒருவர் வீட்டின் முன்பு திரண்ட அப்பகுதி மக்கள், கோழிகளை மற்றும் புடவைகளைத் திரும்ப வீசினர். மேலும், பாஜகவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இவை அனைத்தும் இணையத்தில் இப்போது டிரெண்டாகும் வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்றும் இருப்பினும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இது குறித்து எவ்வித கருத்தும் கூறவில்லை.
என்ன நடந்தது: இது குறித்து கிராமவாசி ஒருவர் கூறுகையில், "பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் கஞ்சிகெரே கிராமத்திற்கு வந்த பாஜகவினர் கோழி மற்றும் புடவைகளைக் கொடுத்து வாக்காளர்கள் மயக்க முயன்றனர். இருப்பினும், மக்கள் அதை ஏற்காமல் திரும்பிக் கொடுத்துவிட்டனர். அவர்கள் செய்தது எங்களுக்குப் பிடிக்கவில்லை. யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை முடிவு செய்வது எனது உரிமை" என்றார்.
சிலர் இந்த பரிசுகளை இரவில் தரும் போது ஏற்றுக் கொண்டனர். இருப்பினும், அவர்களும் மனசு மாறி காலையில் பாஜக பிரமுகர் வீட்டில் இந்த பரிசுகளை வீசி எறிந்ததாகவும் அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.
பாஜக பிரமுகர்: இது குறித்து கஞ்சிகெரே கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகேஷ் ஜி ஜே கூறுகையில், "கிராம மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதைக் காட்ட விரும்பினர். முதலில் அதிகாலை 2 மணியளவில், பாஜக வேட்பாளர் நாராயண கவுடாவின் ஆதரவாளர்கள் கிராமத்திற்கு வந்து கோழி, பணம் மற்றும் புடவைகளைக் கொடுக்க முயன்றனர். கிராம மக்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.
இருப்பினும், மீண்டும் அதிகாலை 3-4 மணிக்கு வந்த அவர்கள், வீடுகளுக்கு வெளியே இந்த பொருட்களை விட்டுச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் காலையில் முதல் வேலையாக பாஜக நிர்வாகி வீட்டிற்குச் சென்று இந்த பொருட்களை எல்லாம் திரும்பிக் கொடுத்துவிட்டனர்" என்றார். கர்நாடகாவில் ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications