தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் இல்லை.. உச்சநீதிமன்றத்தில் நாளை சொல்வோம்: சித்தராமையா ’சேட்டை’
பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க இயலாத சூழ்நிலையை உச்சநீதிமன்றத்தில் நாளை கர்நாடகா அரசு தெரிவிக்கும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு வெறும் 5,000 கன அடி நீரை மட்டும் திறக்க வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. காவிரியில் 6,400 கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க முடியும்; இருந்த போது 5,000 கன அடி நீரை மட்டும் கர்நாடகா திறக்க வேண்டும் என அந்த ஆணையம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமும் இந்த உத்தரவை உறுதி செய்தது.

ஆனால் காவிரியில் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீர்கூட திறக்கவே கூடாது என கன்னட அமைப்புகள், பாஜக, மதச் சார்பற்ற ஜனதா தளம் அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. ஏற்கனவே மண்டியாவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து நாளை பெங்களூரில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டம் செப்டம்பர் 29-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் போராட்டங்களுக்கு பாஜக, மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை முழுமையாக ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஆனால் கர்நாடகா மாநில அரசோ, போராட்டங்களை அமைதி வழியில் நடத்துங்கள்; உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த முடியாது என சொல்ல முடியாது என்கிறது. அத்துடன் கடந்த காலங்களில் பங்காரப்பா ஆட்சியில் ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டதையும் கர்நாடகா அரசு சுட்டிக்காட்டி வருகிறது.
இந்நிலையில் முழு அடைப்பு போராட்டங்கள் தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறியதாவது: ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் போராடுவதற்கு உரிமை உண்டு. எந்த ஒரு ஜனநாயக வழியிலான போராட்டத்தையும் மாநில அரசு தொந்தரவு செய்யாது. ஆனால் பாஜக- மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் காவிரி பிரச்சனையில் பக்கா அரசியல் செய்து கொண்டிருக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ளது. அப்போது, கர்நாடகா அரசு தரப்பில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தர இயலாத சூழ்நிலையை விளக்கி அறிக்கை தாக்கல் செய்வோம். தற்போது உள்ள நிலைமையை விவரிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications