தனிக்குடித்தனம்... மாமியார் இல்லாத உலகம்.. புதுமாப்பிள்ளை செயலால் உறைந்து போன கீதா
பெங்களூர்: கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவரின் மகன் பரத்துக்கு கீதா என்ற பெண்ணுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின்னர் தாயை விட்டு தன்னுடன் தனிக்குடித்தனம் வர வேண்டும் என்று கீதா விரும்பியுள்ளார். ஆனால் பரத்திற்கு அம்மாவை விட்டுவிட்டு வர மணம் இல்லை.. இந்த விவகாரத்தில் புதுமாப்பிள்ளை பரத்தும், அவரது தாய் கீதாவும் எடுத்த முடிவு பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகாவிற்கு உள்பட்ட கப்பலி கிராமத்தில் வசிப்பவர் ஜெயந்தி. இவருக்கு 60 வயது ஆகிறது. இவரது மகன் பரத்துக்கு 35 வயது ஆகிறது. பரத்துக்கு திருமணம் செய்ய விரும்பிய அவரது தாய் ஜெயந்தி பெண் தேடியுள்ளார். அதன்படி ஹாசன் மாவட்டம் அரிசிகெரே பகுதியில் உள்ள பகுரானஹள்ளி கிராமத்தை சேர்ந்த கீதா என்பவரை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பரத்திற்கு திருமணம் செய்து வைத்தார்.

திருமணமான தொடக்கத்தில் இருந்தே தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று பரத்துடன் கீதா தகராறு செய்து வந்தாராம். தனது தாய்க்கு ஒரே ஆதரவாக தான் தான் இருப்பதாகவும். அவரை தனியாக விட்டுவிட்டு வர முடியாது என பரத் கூறினாராம். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அத்துடன் மாமியார் ஜெயந்தியுடனும் கீதா தகராறு செய்து வந்தாராம்.
இந்த நிலையில் பரத் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் கீதா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். இதையடுத்து பரத், பலமுறை மாமியார் வீட்டுக்கு சென்று கீதாவை தன்னுடன குடும்பம் நடத்த வரும்படி அழைத்திருக்கிறாராம். ஆனால் தனிக்குடித்தனம் வராமல் குடும்பம் நடத்த வரமுடியாது என கீதா கூறி வந்தாராம். இதையடுத்து கடந்த மாதம் (பிப்ரவரி) 22-ந்தேதி மற்றும் கடந்த 8-ந்தேதி உறவினர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். அங்கு குடும்பத்தினர், பெரியவர்கள் முன்னிலையிலும், தனிக்குடித்தனம் சென்றால் குடும்பம் நடத்த வருவதாக கீதா உறுதியாக கூறினாராம். இதற்கு பரத் சம்மதிக்க மறுத்துவிட்டாராம்..
இதனால் கீதாவும் வர மறுத்துவிட்டாராம். பேச்சுவார்த்தை எல்லாமே தோற்றதால், பரத்தும், அவரது தாய் ஜெயந்தியும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி கடந்த 10ம் தேதி அன்று காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியேறிய பரத் ஜெயந்தி, அங்குள்ள குட்டை அருகே சென்றனர். அங்கு வைத்து இருவரின் உடல்களையும் சேலையால் கட்டிக் கொண்டு குட்டையில் குதித்துள்ளனர். இதற்கிடையே நேற்று காலை வீடு திறக்கப்படாமல் கிடந்ததால், அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது 2 பேரும், வீட்டில் இல்லை. அவர்களை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
அப்போது நேற்று முன்தினம் அதிகாலை 3.15 மணி அளவில் தாயும், மகனும் கையை பிடித்து கொண்டு நடந்து செல்வது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அத்துடன் அங்குள்ள குட்டையின் கரையில் 2 பேரின் காலணியும் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி இரேசாவே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, தீயணைப்பு படையினர் உதவியுடன் குட்டையில் தேடினர். அப்போது சேலையால் கட்டப்பட்ட நிலையில் பரத் , ஜெயந்தி உடல்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இரேசாவே போலீசார் பரத்தின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, வீட்டில் கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கி இருந்தது. அதில், எங்களின் சாவுக்கு கீதா தான் காரணம் என்று எழுதி வைத்திருந்தனர். அவரால் தான் எங்கள் வாழ்க்கையே சீரழிந்து விட்டது. எங்களின் உடல்களை பார்க்கவோ, இறுதிச்சடங்கு செய்யவோ அவரை அனுமதிக்க கூடாது. எங்கள் வீட்டிற்கே அவர் வரக்கூடாது என எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கீதாவை அழைத்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் ஹாசன் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications