மதம் மாறலைனா ரேப் கேஸ்னு மிரட்டல்.. காதல் மனைவி ஹோசாமனி மீது இளைஞர் புகார்.. என்ன நடந்தது! பின்னணி
பெங்களூர்: நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் திருமணத்திற்குப் பிறகு மனைவி தன்னை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முயல்வதாக இளைஞர் ஒருவர் அளித்த புகார் நேற்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேலும், மதமாற்றம் செய்யவில்லை என்றால் பலாத்காரப் புகாரை அளிக்கப்போவதாகவும் சொல்லியும் அந்த மனைவி மிரட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது! மனைவி மீது அவர் சொல்லும் புகார்கள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் பல்வேறு மதங்கள் உள்ளன. அதைப் பல்வேறு தரப்பினரும் பின்பற்றி வருகிறார்கள். இந்த வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் மிகப் பெரிய பலமாக இருக்கிறது. ஆனாலும், சில இடங்களில் சில தனிப்பட்ட நபர்கள் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பான செய்திகள் வெளியாகி விவாதத்தைக் கிளப்புவதாக இருக்கிறது.

மிரட்டல்
அப்படியொரு சம்பவம் தான் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடந்தது. அந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் இது குறித்து நேற்று புகாரளித்திருந்தார். அதாவது கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் காதலித்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு தனது மனைவி தன்னை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
என்ன நடந்தது
விஷால் குமார் கோகாவி என்ற அந்த நபர் இது தொடர்பாக போலீஸிலும் புகார் அளித்துள்ளார். அதில் தஹ்சீன் ஹோசாமனி என்ற பெண்ணை மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகவும், நவம்பர் 2024ல் இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், பதிவு திருமணத்திற்குப் பிறகு, ஹோசாமனி தன்னை முஸ்லிம் முறைப்படி மீண்டும் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியதாக கோகாவி குற்றம் சாட்டுகிறார்.
மதமாற்றம்?
திருமண உறவில் பிரச்சினை வரக்கூடாது என்று விரும்பி, கடந்த ஏப்ரல் 25ம் தேதி முஸ்லிம் முறைப்படியும் ஹோசாமனியை திருமணம் செய்து கொண்டதாக விஷால் குமார் கூறியிருக்கிறார். இருப்பினும், அப்போது தனக்குத் தெரியாமலேயே தனது பெயரை மாற்றிவிட்டதாகவும் முஸ்லிம் மதகுரு மூலம் தான் அறியாமலேயே மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் விஷால் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையே முஸ்லிம் முறைப்படி விஷால் குமார், ஹோசாமனியை திருமணம் செய்யும் வீடியோ ஒன்று இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மறுப்பும் மிரட்டலும்!
முஸ்லீம் முறைப்படி திருமணம் நடந்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்து முறைப்படு கல்யாணம் செய்து கொள்ள ஹோசாமனி முதலில் ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆனால், பின்னர் அவரது குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடியாது என ஹோசாமனி மறுத்துவிட்டதாகவும் விஷால் குமார் கூறியுள்ளார்.
மேலும், தான் மதம் மாறவில்லை என்றால் தன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குத் தொடரப்போவதாக ஹோசாமனி மிரட்டியதாகவும் விஷால் குமார் தனது புகாரில் கூறியுள்ளார். ஹோசாமனியும் அவரது தாயார் பேகம் பானுவும் தன்னை மதமாற்றம் செய்யும் முயற்சியாக ஜமாத்தில் கலந்து கொள்ளச் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு 299 மற்றும் பிரிவு 302 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications