பெங்களூர் கங்காவுக்கு எமனாக வந்த காதல் கணவன்.. ஒரே நாளில் முடிவுக்கு வந்த 7 வருட காதல் வாழ்க்கை
பெங்களூர்: பெங்களூர் புறநகா் ஆனேக்கல்லை அடுத்த ஹெப்பகோடியில் வசித்து வருபவர் மோகன். இவரது மனைவி கங்கா.. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்த இந்த தம்பதியின் வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாக மாறியுள்ளது தொழிற்சாலையில் வேலை செய்யும் தனது நண்பனுடன் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக கருதிய மோகன், மனைவி கங்காவை என்ன செய்தார் தெரியுமா? இந்த சம்பவம் பெங்களூர் புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்காதலும், சந்தேகமும், மிக மோசமான குற்றங்களுக்கு காரணமாகி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே கள்ளக்காதல் கலாச்சார சீரழிவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் நடத்தையில் சந்தேகப்பட்டு குற்றச்செயல்களில் ஆண்கள் பெரிய அளவில் ஈடுபடுகிறார்கள். பெங்களூரின் புறநகர் பகுதியான ஹெப்பகோடியில் நடுரோட்டில் இளம்பெண் கங்காவிற்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்.

பெங்களூர் புறநகர் ஆனேக்கல்லை அடுத்த ஹெப்பகோடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி ராமையா லே-அவுட். இந்த பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 32). இவர் ஹெப்பகோடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கங்கா (27). இவர்கள் 2 பேரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கல்யாணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குழந்தை படித்து வருகிறாள்.
இந்தநிலையில் தன்னுடைன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் நண்பர் ஒருவருக்கும் கங்காவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக மோகன் சந்தேகம் அடைந்தார். இந்த விவகாரத்தில் மோகன், மனைவி கங்காவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் கோபமடைந்த கங்கா, சந்தேகப்படும் உன்னோடு வாழ முடியாது என்று மோகனிடம் கூறிவிட்டு சென்றுவிட்டாராம்.
இதனால் 2 பேரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளார்கள். எனினும் மோகன் அடிக்கடி மனைவி வீட்டுக்கு சென்று குழந்தையை பார்த்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் மனைவி வீட்டுக்கு சென்றபோது, அவர் குழந்தையை காண்பிக்க முடியாது என்று தகராறு செய்தாராம். இந்த தகராறு முற்றியதில் கங்காவை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று மோகன் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி நேற்று காலை கங்கா குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.அப்போது ராமையா லே-அவுட் அருகே நடுரோட்டில் அவரை வழிமறித்த மோகன், கங்காவிடம் தகராறு செய்தாராம். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கங்காவின் வயிற்றில் சரமாரியாக 7 முறை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கங்கா உயிருக்காக போராடி கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கங்கா உயிரிழந்தார்.
இதுகுறித்து ஹெப்பகோடி போலீசாருக்கு மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ஹெப்பகோடி போலீசார் கங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹெப்பகோடி போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, மோகன் இந்த கொலை செய்திருப்பதாக தெரியவந்தது. இது தொடர்பாக அவரை கைது செய்த ஹெப்பகோடி போலீசார் தொடர்ந்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications