நடிகை பவித்ரா கவுடாவின் செருப்பில் இருந்தது ரேணுகா சுவாமியின் ரத்தக் கறை! குற்றப்பத்திரிகையில் பகீர்
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகா சுவாமி கொலை வழக்கில் அவருடைய ரத்தக் கறையானது நடிகை பவித்ரா கவுடாவின் செருப்பில் இருந்ததாக குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் தர்ஷன் (47). இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் தர்ஷனுக்கு, நடிகை பவித்ரா கவுடாவுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் பவித்ரா கவுடாவை, தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி என்பவர் இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்தது. அதாவது தர்ஷனுக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி, குழந்தை இருப்பதால் அவரை விட்டு பவித்ரா கவுடா பிரிந்து செல்ல வேண்டும் என ரேணுகா சுவாமி மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இதனால் கோபமடைந்த பவித்ரா, தர்ஷனிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் தனது மேலாளர் நாகராஜ் மூலம் ரசிகர் மன்றத் தலைவர் ராகவேந்திராவை அனுப்பி ரேணுகா சுவாமியை சித்ரதுர்காவில் இருந்து பெங்களூருக்கு கடத்தி வந்துள்ளார்.
பெங்களூரில் வாகனம் நிறுத்தும் இடத்தில் அவரை அடைத்து வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இரும்புக் கம்பியில் அடித்ததுடன், ஷூ காலில் எட்டி உதைத்துள்ளார். அவருடன் இருந்த பவித்ரா கவுடாவும் எட்டி உதைத்துள்ளார். அவரை பவித்ரா, பல முறை செருப்பில் அடித்ததாக தெரிகிறது.
அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட செருப்பில் ரேணுகா சுவாமியின் செருப்பில் ரேணுகா சுவாமியின் ரத்தம் படிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தர்ஷனும் பவித்ரா கவுடாவும் சம்பவ இடத்தில் இருந்ததற்கான நேரடி சாட்சியங்கள் தொழில்நுட்ப ஆதாரங்கள் உள்ளன. தர்ஷனின் பவுன்சர்களும் நண்பர்களும் சேர்ந்து ரேணுகா சுவாமியை சரமாரியாக அடித்ததில் அவர் உயிரிழந்தார்.
இந்த தாக்குதலில் அவரது உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் எலும்புகள் முறிந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலையை மறைக்க தர்ஷன், ரேணுகா சுவாமியின் உடலை தனது உதவியாளர்கள் மூலம் சாக்கடையில் வீசியுள்ளார்.
மேலும் இந்த கொலையை மறைக்க 3 பேருக்கு பணம் கொடுத்து கொலை செய்ததாக ஒப்புக் கொள்ள செய்துள்ளதாகவும் தெரிகிறது. இதற்கான சிசிடிவி கேமராவில் பதிவான ஆதாரங்கள் சித்ரதுர்கா, வாகன நிறுத்துமிடம் , உடல் வீசப்பட்ட இடம், தர்ஷன், பவித்ரா கவுடாவின் வீடு ஆகியவற்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தவிர தர்ஷன் பவித்ரா கவுடா, நாகராஜ், மஞ்சுநாத் ஆகியோரின் சட்டையில் ரத்தக் கறை படிந்தது தெரியவந்தது. இதை பரிசோதனை செய்த ஹைதராபாத் தடயவியல் ஆய்வகம், பவித்ரா கவுடாவின் செருப்பில் இருந்தது ரேணுகா சுவாமியின் ரத்தக் கறையை உறுதி செய்துள்ளது என அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கெனவே தர்ஷன் சிறையில் இருந்து வருகிறார். அது போல் கடந்த ஜூன் 11 ஆம் தேதி பவித்ரா கவுடாவும் கைது செய்யப்பட்டுள்ளார். தர்ஷனின் மேலாளர் நாகராஜ், ரசிகர் மன்ற தலைவர் ராகவேந்திரா, பவுன்சர்கள் கார்த்திக், மஞ்சுநாத் உட்பட 16 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த பெங்களூர் கூடுதல் ஆணையர் கிரீஷ் பெங்களூர் மாநகரத்தின் 29ஆவது முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,991 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். அதில் பவித்ரா கவுடா முதல் குற்றவாளியாகவும் தர்ஷன் 2ஆவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். 231 சாட்சியங்களின் அடிப்படையில் பவித்ரா கவுடா உள்பட 17 பேர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications