அடுத்த இன்னிங்ஸுக்கு ரெடியாகும் பன்னீர்.. புலிகேசியில் ‘நீயா நானா’? எடப்பாடி vs ஓபிஎஸ் செம ஃபைட்!?
பெங்களூர் : கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவுக்கு இடம் ஒதுக்கப்படாத நிலையில், துணிவாக தனித்து களமிறங்க முடிவு செய்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. கர்நாடகாவில் தங்கள் அணிக்கே பலம் அதிகம் எனக் கூறி வரும் ஓபிஎஸ் தரப்பு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதுதான் கர்நாடகா அதிமுகவில் உச்சகட்ட எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நடந்துவரும் அதிகார மோதலில் நீதிமன்ற தீர்ப்புகளைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளது. கட்சியின் பெரும்பான்மை மக்கள் பிரதிநிதிகள், தலைமைக் கழக நிர்வாகிகளை அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டாலும், தேர்தலில் போட்டியிடும்போது சின்னம் பெறுவதில் உள்ள சிக்கல் தொடர்கிறது.

கர்நாடகா தேர்தலில் அதிமுக : 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் ஒரே கட்டமாக மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாளையுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுகவும் களமிறங்க திட்டமிட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளை கேட்டுப் பெற முயற்சி எடுக்கப்பட்டது.
ஆனால், பாஜக அத்தனை தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதிமுக போட்டியிடத் திட்டமிட்டிருந்த கோலார் தங்கவயல், காந்தி நகர், பெங்களூர் தெற்கு தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். இதனால் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட இனி வாய்ப்பு இல்லை. இதனால், அதிமுக தனித்து போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

புலிகேசி நகரில் பாயும் எடப்பாடி டீம் : இந்நிலையில் கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில், அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். புலிகேசி நகர் தனித் தொகுதியில் போட்டியிடும் அன்பரசன், கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவராக உள்ளார். அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், புலிகேசி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு போட்டியாக அதிமுகவும் வேட்பாளரை களமிறக்கியுள்ளது.
இதுஒருபுறமிருக்க, ஓ.பன்னீர்செல்வமும், கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க திட்டமிட்டார். இதற்காக கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவையும் சந்தித்துப் பேசியிருந்தார் புகழேந்தி. ஆனால், பாஜக அதிமுகவுக்கு சீட் ஒதுக்க முன்வராத நிலையில், கோலார் தங்க வயல், காந்திநகர், பங்காரு பேட் போன்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓபிஎஸ் டீம் பிளான்? : வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ளது. ஓபிஎஸ் அணி என்ன முடிவெடுக்கப்போகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. வேட்புமனு பரிசீலனைக்கு முன்பு, தேர்தல் ஆணையத்தின் முடிவு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்தால், அவரது தரப்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இல்லாவிட்டால், இருதரப்புக்கும் இரட்டை இலை கிடைக்காமல் போகும் நிலை உள்ளது.
புலிகேசி நகர் தொகுதி அதிகளவில் தமிழர்கள் வசிக்கும் பகுதி என்பதால் அங்கு போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவெடுத்துள்ளது. கர்நாடகாவில் முன்னர் எம்.எல்.ஏக்களை வைத்திருந்தது அதிமுக. ஜெயலலிதா இருக்கும்போது புகழேந்தி கர்நாடகா மாநில அதிமுக செயலாளராக இருந்தார். புகழேந்தி தற்போது ஓபிஎஸ் தரப்பில் இருப்பதால், அங்கு ஓபிஎஸ் அணிக்கே பலம் என அவரது தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக தங்கள் பலத்தை நிரூபிக்கும் திட்டத்தோடு அதே புலிகேசி நகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை நிறுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த தொகுதியில் தங்கள் பலத்தை நிரூபித்தால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அடுத்த இன்னிங்ஸ் ஆட்டத்தை இதை வைத்தே வேகப்படுத்தலாம் என்ற திட்டம் ஓபிஎஸ் தரப்புக்கு இருக்கிறதாம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிடாதது அவருக்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியதால், இந்த தேர்தலில் போட்டியிட்டு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு குடைச்சல் கொடுக்கலாம் என்பது ஓபிஎஸ் அணியினரின் கணக்காம். இன்று அல்லது நாளைக்குள் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications