வெள்ளத்துக்கிடையே இது வேற! என்னோட தோசைய காணோம்.. காங்கிரஸ் vs தேஜஸ்வி சூர்யா! தொடரும் சாப்பாடு சண்டை
பெங்களூர்: பெங்களூர்வாசிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் தேஜஸ்வி சூர்யாவின் தோசை சண்டை தொடர்கிறது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த வாரம் பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. குறிப்பாகக் கர்நாடக தலைநகர் பெங்களூரில் அதி தீவிர கனமழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாகப் பெங்களூரில் பல முக்கிய சாலைகளில் வெள்ள நீரில் மூழ்கியது. பல கார்கள், இரு சக்கர வாகனங்கள் அப்படியே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

வெள்ளம்
நகரில் பல இடங்களில் சாலைகளே தெரியாத அளவுக்கு மழை நீர் வெள்ளம் போல ஓடியது. கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிகபட்ச மழை பெய்ததே இதற்குக் காரணமாகும். இந்த மழையில் இருந்து பெங்களூர் இப்போது தான் மெல்ல மீண்டு வருகிறது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். சாலைகளில் வாகனங்களே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

காங். vs பாஜக
இந்தச் சூழலில் தான் பாஜகவும், காங்கிரசும் தோசைக்காக ட்விட்டர் சண்டை போட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை டெலிவரி செயலி ஒன்றின் மூலம் பாஜக தலைவர் தேஜஸ்வி சூர்யாவுக்கு காங்கிரஸ் பத்து மசாலா தோசைகளை பார்சல் அனுப்பியது. இருப்பினும், இந்த தோசைகள் தன்னிடம் வந்து சேரவில்லை என்று தேஜஸ்வி சூர்யா நக்கலாகக் கூறி இருந்தார். மாநிலத்தில் தலைவிரித்து ஆடும் ஊழலையே இது காட்டுவதாக காங். சுளீர் பதிலடி கொடுத்துள்ளது.

சண்டை
இந்த சண்டை கடந்த வாரம் தொடங்கியது. ஒட்டுமொத்த பெங்களூர் நகரமே வெள்ளத்தில் மூழ்கி இருந்த நிலையில், பத்மநாபநகரில் உள்ள ஒரு உணவகத்தில் தேஜஸ்வி சூர்யா மாசால் தோசை சாப்பிடும் வீடியோ வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பி இருந்தது. மேலும், அவர் தோசை நன்றாக இருப்பதாகவும் அனைவரும் இதை ட்ரை செய்யலாம் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இது இணையத்தில் டிரெண்டிங் ஆனது.

அட்டாக்
பெங்களூருவாசிகள் நகரின் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் போது தேஜஸ்வி சூர்யா இப்படிச் செய்வது செய்வது சரியா எனச் சாடியிருந்தது. மேலும், அவருக்கு 10 மசால் தோசைகளையும் அனுப்புவதாகச் சாடியிருந்தது. இந்நிலையில், இதற்குத் தேஜஸ்வி சூர்யா நக்கலாகப் பதிலடி கொடுத்து இருந்தார். அதாவது தனது ட்விட்டரில், "காங்கிரஸ் கட்சியினர் எனது வீட்டிற்கு மசால் தோசை அனுப்புவதாகத் தெரிவித்து இருந்தனர்.

நக்கல்
அவர்கள் சொல்லி 24 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இன்னும் எனக்கு எனது தோசைகள் வந்து சேரவில்லை. இதிலும் அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள். சாதாரண தோசையையே ஒழுங்காக டெலிவரி செய்ய முடியாத இவர்களால், நல்ல நிர்வாகத்தை எப்படித் தர முடியும்" என்று நக்கலாகக் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்குக் காங்கிரஸ் கட்சி சுளீர் பதிலடி கொடுத்துள்ளது.

பதிலடி
இது குறித்து காங்கிரஸின் தேஜேஷ் குமார் தனது ட்விட்டரில், "தேஜஸ்வி சூர்யா, தோசைகளை உங்கள் அலுவலக முகவரிக்கு அனுப்பி உள்ளோம். அதற்கான பில்லும் இருக்கு. கர்நாடக பாஜக அரசில் 40% ஊழல் நடப்பது அனைவருக்கும் தெரியும். இப்போது உங்கள் அலுவலகத்திலும் 100% ஊழலை நடப்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். உங்கள் அலுவலகத்தில் யாரோ உங்கள் தோசையைச் சாப்பிட்டுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

என்ன நடந்தது
தேஜஸ்வி சூர்யாவின் அலுவலகத்திற்கு டெலிவரி ஊழியர் ஒருவர் வந்ததாகவும் இருப்பினும், அவரை போலீசார் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது. நகரில் வெறும் 5% மட்டுமே பாதித்த வெள்ளம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பவே காங்கிரஸ் இப்படி முயன்று வருவதாகத் தேஜஸ்வி சூர்யா முன்பு சாடி இருந்தது குறிப்பிடத்தது.












Click it and Unblock the Notifications