பெங்களூருவில் மாயமான '3000' கொரோனா நோயாளிகள்.. "ஓடலை".. உண்மையில் நடந்தது இதுதான்!
கர்நாடகா: 'எங்கே தேடுவேன்.. அவர்களை எங்கே தேடுவேன்' என்று ரத்தக் கண்ணீருடன் புலம்பிக் கொண்டிருக்கிறது பெங்களூரு நிர்வாகம். காரணம், காணாமல் போன 3,000 கொரோனா நோயாளிகள்.
Recommended Video
கேட்கவே ஷாக் அடிக்கும் இந்த செய்தி தான் இப்போது கர்நாடகாவில் ஹாட் டாபிக். கொரோனா பாஸிட்டிவ் நோயாளிகள் 3000 பேர் காணாமல் போயுள்ளதாக, அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் அசோகா அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.
அவர்களால் தான், கர்நாடகாவில் தாறுமாறாய் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாக கூறிய அமைச்சர், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
தப்பி ஓடினார்களா?
எல்லாம் சரி! அந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் காணாமல் போனார்களா? அல்லது உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பி ஓடினார்களா? என்பதே இங்கு கேள்வி. கர்நாடகாவில் முழு லாக் டவுன் போடப்படாது என்று கர்நாடக அரசு அறிவித்ததை நம்பி, ஏகப்பட்ட வெளியூர் தொழிலாளர்கள் பெங்களூருவில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆனால், கர்நாடகாவில் கொரோனா வீரியம் அதிகரிக்க, 14 நாட்களுக்கு லாக் டவுன் போடப்பட்டுள்ளது. இதை அன்றாடம் காட்சி தொழிலாளர்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை
கண்டுகொள்ளாத அரசு
பிறகு, சொந்த ஊர்களுக்கு செல்ல ரயிலைப் பிடிக்க ஓடிய கூட்டம், அங்கு படிக்கட்டு வரை தலைகள் தொங்க, பேருந்து நிலையம் நோக்கி ஓடியது. அங்கு அரசு பஸ்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவியது. இதனால், தனியார் பேருந்துகளுக்கு சென்றால், அங்கு 1000 ரூபாய் டிக்கெட் 6000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதுவும், ஆன்லைனில் '6000' என்று கொஞ்சம் கூட பயமின்றி விலையை போட்டு கொள்ளை அடிக்கப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஒரு இடம் கூட இல்லை
சரியான திட்டமிடல் இன்றி அரசு செயல்பட்டதால், ஊருக்கும் போக முடியாமல், பெங்களூரிலும் வேலை இல்லாமல், சாப்பாட்டுக்கு கூட பலர் திண்டாடிக் கொண்டு இருக்கின்றனர். இது ஒருபுறமிருக்க, பெருகி வரும் வைரஸ் காரணமாக, பலருக்கும் மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை. ஆக்சிஜன் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். முதலில் 'பெட்' வேண்டுமே. அதற்கே அல்லாட வேண்டியதாக உள்ளது பெங்களூருவில். சமீபத்தில், கொரோனா பாதித்த நபர் ஒருவரை, குடும்பத்தினர் ஆம்புலன்சில் வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் அலைந்தும், ஒரு மருத்துவமனையில் கூட இடம் கிடைக்கவில்லை. இறுதியில், மூச்சுத்திணறலில் அந்த நபர் இறந்தே போக, மறுநாள் தகனம் செய்வது வரை ஆம்புலன்சில் வைத்திருக்க, அதன் டிரைவர் 60,000 ரூபாய் கேட்டதெல்லாம் வேற லெவல். அந்த அளவுக்கு பெங்களூரு மாநகராட்சியின் நடவடிக்கைகள் உள்ளன.
தெறித்து ஓடும் மக்கள்
இவ்ளோ ஏன்.. கொரோனா டெஸ்ட் ரிசல்ட் கூட அங்கு சரியான நேரத்தில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. அது கிடைத்தால் மருத்துவமனையில் இடம் கிடைப்பதில்லை. இடம் கிடைத்தால் ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இறுதியில், வரிசையில் வைத்து பிணங்களை எரிப்பதில் கூட தாமதம் ஏற்படுவது கொடுமையின் உச்சம். இத்தனை கொடுமைகளுக்கு பயந்தே பலரும் எப்படியாவது சொந்த ஊர்களுக்கு சென்று விட வேண்டும் என்று தெறித்து ஓடுகின்றனர். 'போற உசுரு சொந்த ஊருலயே போகட்டும்' என்ற மனநிலையும் மற்றொரு காரணம்.
சாமானிய மக்கள்
கர்நாடகாவின் மற்ற ஊர்களில் கூட இவ்வளவு புகார்கள் வருவதில்லை. ஆனால், தலைநகர் பெங்களூருவில் குவிகிறது. இன்னும் சொல்லப்போனால், பெங்களூருவில் சிகிச்சை பெறுவதை விட, தன் உள்ளூரில் சிகிச்சை பெற்றால் கூட பிழைத்துவிடலாம் என்று சாமானிய மக்கள் எண்ணுகின்றனர். அந்த 3000 கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளில் பலரும் இந்த எண்ணத்தில் தான் வெளியேறி இருக்கக் கூடும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.