பெங்களூரில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் கொட்டி தீர்த்த கன மழை.. வெள்ளம்.. காரணம் என்ன?
பெங்களூர்: பெங்களூரில் இந்தாண்டு அக்டோபர் மாதம் மிக கன மழை பெய்துள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு நகரம் மிக அதிக அளவு மழையை பதிவு செய்துள்ளது.
Recommended Video
ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை, பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் 478 மிமீ மழை பெய்திருந்தது. இயல்பாக அந்த மாதத்தில் சராசரியாக 468 மிமீ மழை பெய்வது வழக்கம். அதை விட இந்த வருடம் அதிகம் மழை பதிவாகியிருந்தது.

இந்த அளவு உயர்வு குறிப்பிடத்தக்கதாக இல்லை என்றாலும், இந்த ஆண்டு மழை சீரானதாக இல்லை. செப்டம்பருக்கு முன்பும், சில மாதங்களில் சராசரி மழையை விட அதிகமாக பதிவாகியுள்ளது. அக்டோபர் மாதத்தில் இன்னும் நிலைமை மோசம். வழக்கத்தை விட ரொம்பவே அதிகமாக மழை கொட்டிக் கொண்டு இருக்கிறது.
பெங்களூர் நகரவாசிகள், நாம் எங்கே இருக்கிறோம்.. ஒருவேளை மலநாடு பிராந்தியத்தில் உள்ள உடுப்பியிலோ, ஆகும்பேயிலோ, சிக்மகளூரிலோ இருக்கிறோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு விடாது மழை பெய்து கொண்டுள்ளது. குளிக்க போகும்போது வெயில் அடிக்கிறது, குளித்து வெளியே வரும்போது பலத்த மழை பெய்து சாலைகளில் வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படியான ஒரு வானிலையை பெங்களூர் பார்த்துக் கொண்டுள்ளது.
இந்திய வானிலை அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், வங்காள விரிகுடாவிற்கும் அரபிக்கடலுக்கும் இடையிலான காற்றழுத்தம் காரணமாக அக்டோபரில் பலத்த மழை பெய்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூருவில் இடியுடன் கூடிய மழை பெய்யும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இதே போன்ற நிலை ஏற்படுவது வழக்கம்தான். இதுவரை பெங்களூரில் இந்த ஆண்டு 1,006 மிமீ மழை பதிவாகியுள்ளது. ஆண்டு சராசரி 986.9 மிமீ என்பதை விட இது அதிகமாகும்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின்வானிலை ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், 2011ம் ஆண்டு சர்வதேச விமான நிலையத்தில் வானிலை ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. அப்போது முதல் இப்போது வரை, இந்த ஆண்டு, அக்டோபர் 11ம் தேதி அதாவது, கடந்த திங்கள்கிழமைதான் மிக அதிக மழை பதிவாகியுள்ளது.
பெங்களூர் விமான நிலையத்தில், திங்களன்று 178.3 மிமீ மழை பெய்துள்ளது. பிக்-அப் மற்றும் டிராப் பாயிண்டுகளுக்கு அருகில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மோசமான வானிலை காரணமாக 11 விமானங்கள் புறப்பட தாமதமாகின. டிராக்டர்களை பயன்படுத்தி விமானங்களுக்கு பயணிகள் கொண்டு சென்று விடப்பட்டனர்.
விமான நிலையத்தில் வடிகால் அமைப்பு மோசமாக உள்ளதா என்ற கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பிய நிலையில், பெங்களூர் சர்வதேச விமான நிலைய லிமிடெட் (BIAL) செய்தித் தொடர்பாளர் அதை மறுத்திருந்தார். 2008ல் விமான நிலைய செயல்பாடுகள் தொடங்கியதிலிருந்து, விமான நிலையத்தில் ஒரு நாளில் இதுபோன்ற பெரிய அளவுக்கான மழை பதிவானது இல்லை. எனவேதான் வெள்ளம் ஏற்பட்டது என்று அவர் கூறியிருந்தார்.
பெங்களூரில் 24 மணிநேரத்தில் அதிக மழைப்பொழிவு 1997ம் ஆண்டு, அக்டோபர் 1ம் தேதி பதிவானது. அன்று ஒரே நாளில், 178.9 மிமீ ஆகும். தற்போது அதை விட சற்று குறைவாக, 178.3 மி.மீ. 1909ம் ஆண்டு மே 06ம் தேதி 153.9 மிமீ மழை பெய்தது. அக்டோபர் மாதத்தில் மாதாந்திர சராசரி மழைப்பொழிவு - 2020 அக்டோபர் 204.3 மிமீ. 2019 அக்டோபரில் 178.4 மிமீ மழை, 2018 அக்டோபரில் 111.7 மிமீ மழை பதிவானது. 2014 அக்டோபரில் 343.8 மிமீ மழை பதிவானது. அநேகமாக நேற்று இரவு பெய்த கன மழை தொடர்பான புள்ளி விவரம் வெளியான பிறகு புது சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications