கர்நாடகா: எடியூரப்பா டூ இடஒதுக்கீடு வரை- 2024 லோக்சபா தேர்தலுக்காக அத்தனையிலும் முட்டி மோதும் பாஜக!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைப்பது என்பது மட்டுமல்ல.. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தென்னிந்தியாவில் ஒரே நம்பிக்கை மாநிலமான கர்நாடகாவில் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதும் பாஜகவின் தேர்தல் வியூகமாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
224 இடங்களைக் கொண்ட கர்நாடகா சட்டசபையில் பாஜகவுக்கு 119 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்; காங்கிரஸ் 75; ஜேடிஎஸ் 28 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2018-ம் ஆண்டு தேர்தலின் போது பாஜகவுக்கு 108 எம்.எல்.ஏக்கள்தான் கிடைத்தனர். ஆனால் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளில் உள்ளடி வேலை பார்த்து 119 எம்.எல்.ஏக்களை தேற்றி வைத்திருக்கிறது பாஜக.

இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல அல்லாமல், கர்நாடகாவில் அத்தனை பிரச்சனைகளிலும் மிகப் பெரும் சமரசமான வியூகத்தை கையில் எடுத்திருக்கிறது பாஜக. கர்நாடகா தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் பசவராஜ் பொம்மைதான் என்பதில் டெல்லி மேலிடம் உறுதியாகவே இருக்கிறது. அதற்காக எப்போதும் குடைச்சல் தரக் கூடிய எடியூரப்பாவையோ அவரது குடும்பத்தினரை அவ்வளவு எளிதாக கைவிடவும் பாஜக மேலிடம் தயாராக இல்லை.
பாஜகவின் வாக்கு வங்கியாக இருக்கும் லிங்காயத்துகளை தக்க வைக்க மடங்களை தேடி தேடி செல்கிறது பாஜக. அதேபோல் ஜேடிஎஸ், காங்கிரஸ் வாக்கு வங்கியாக இருந்தாலும் ஒக்கலிகா கவுடா ஜாதி மடங்களையும் குறிவைத்து ஆதரவு திரட்டுகிறது பாஜக. எடியூரப்பாவையும் அவரது மகனையும் கைவிட்டுவிடக் கூடாது; அது களத்தில் பாஜகவுக்கு பெரும் சேதாரத்தைத் தரும் என்ற அச்சத்தால் உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த விவகாரத்தில் அனுசரணையான போக்கை தொடர்ந்து கடைபிடிக்கிறார். இதனாலேயே எடியூரப்பாவுக்கு பாஜகவின் நாடாளுமன்ற குழுவில் இடம் கொடுக்கப்பட்டது. பிரதமர் வேட்பாளராக பேசுபொருளாக இருக்கக் கூடிய உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கூட இந்த முக்கியத்துவம் தரப்படவில்லை.

தற்போதைய சட்டசபை தேர்தலில் வெல்வது மட்டுமே பாஜகவின் இலக்கு இல்லை என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தென்னிந்தியாவில் கர்நாடகாவில் மட்டும்தான் 25 எம்.பிக்களை பாஜக பெற்றது. கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவுக்கு மொத்தமாக இத்தனை எம்பிக்கள் கிடைப்பதற்கு எந்த ஒரு சாத்தியமுமே இல்லை என்பது தெரிந்த கதை. ஆகையால் கர்நாடகாவில் பாஜகவின் வெற்றியும் பலமான பிடிமானதும் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வெற்றிக்கு மிக முக்கியமானதாக கருதுகின்றனர் அக்கட்சித் தலைவர்கள். அதனால்தான் கடந்த 4 மாதங்களில் 8 முறை கர்நாடகாவுக்கு படையெடுத்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications