சித்தராமையா VS டிகே சிவக்குமார்.. முதல்வர் தேர்வில் 2 நாள் குழப்பம் ஏன்? காங்கிரஸ் விளக்கம் இதுதான்
பெங்களூர்: கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும் முதல்வர், துணை முதல்வர் தேர்வில் கடந்த 2 நாட்களாக குழப்பம் இருந்ததற்கான முக்கிய காரணத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்பது பற்றி டெல்லியில் இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கேசி வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த வேளையில் கேசி வேணுகோபால் கூறியதாவது:

கர்நாடகா தேர்தல் வெற்றிக்கு ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை உதவியது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்திக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். கர்நாடகா முதல்வர் தேர்வில் கடந்த 2 நாட்களாக குழப்பம் இருந்தது உண்மைதான். ஏனென்றால் கர்நாடகாவில் திறமையான அதேநேரத்தில் சக்திவாய்ந்த தலைவர்கள் உள்ளனர்.
சித்தராமையா முதல்வராக இருந்த அனுபவம் கொண்டவர். டிகே சிவக்குமார் காங்கிரஸ் தலைவராக திறம்பட செயல்பட்டுள்ளார். சக்திவாய்ந்த தலைவராகவும் உள்ளார். இவர்கள் 2 பேரும் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்கள் தான். தற்போது கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஒரேயொரு துணை முதல்வராக டிகே சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வர் பதவியோடு டிகே சிவக்குமார் மாநில காங்கிரஸ் தலைவராக நாடாளுமன்ற தேர்தல் வரை தொடருவார்.

இந்த தேர்தல் மற்றும் முதல்வர் தேர்வில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவருக்கும் நன்றிகள். சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் முறையே முதல்வர், துணை முதல்வராக வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளனர்'' என கேசி வேணுகோபால் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications