'மினி தமிழகம்' பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டி.. பிரகாஷ்ராஜ் பிளான் என்ன?
பெங்களூர்: அரசியலில் குதித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், சுயேச்சையாக களமிறங்க தேர்ந்தெடுத்துள்ள பெங்களூர் மத்திய தொகுதி, தமிழர்கள் அதிகம் வாழக்கூடியது. கன்னடர்களைவிடவும் அதிகம் என்று கூட தைரியமாக சொல்லலாம்.
மத்திய அரசுக்கு எதிராகவும், பாஜகவிற்கு எதிராகவும் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன் வைத்து வருபவர் பிரகாஷ் ராஜ். பல்வேறு கருத்தரங்குகளிலும் இவர் மத்திய அரசை கண்டித்து பேசியுள்ளார். டிவிட்டரில் தொடர்ச்சியாக கேள்விக்கணைகளை தொடுத்து வருகிறார்.
இந்த நிலையில்தான், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளதாக, சில தினங்கள் முன்பாக, ட்விட்டரில் அறிவித்தார், பிரகாஷ் ராஜ். மேலும் தான் போட்டியிட உள்ள தொகுதியையும் அறிவித்தார். பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிட உள்ளதாக அவர் அறிவித்த போது எல்லோருக்குமே பெரிய ஷாக்.
தமிழர்கள் தொகுதி
ஏனெனில், பெங்களூர் மத்திய தொகுதி என்பது, கன்னடர்களை காட்டிலும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. கணிசமாக தெலுங்கு, மலையாளம் பேசும் மக்கள் உள்ளனர். முஸ்லீம்கள் கணிசமாக உள்ளனர். பொதுவாக 'எலைட்' வேட்பாளர்களின் சாய்ஸ், பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதிதான். கடந்த லோக்சபா தேர்தலில் இன்போசிஸ் நிறுவன முன்னாள் அதிகாரி, நந்தன் நிலகேனி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். முன்னாள் முதல்வர் சதானந்தகவுடா பெங்களூர் வடக்கு தொகுதியை தேர்ந்தெடுத்தார்.
மண்ணின் மைந்தர்கள்
ஆனால், பெங்களூர் மத்திய தொகுதி என்பது மண்ணின் மைந்தர்களுக்கானது. எலைட்களுக்கானது கிடையாது என்றுதான் தேர்தல் வரலாறு கூறுகிறது. இந்த லோக்சபா தொகுதிக்குள், காந்திநகர், சிவாஜிநகர், சாந்திநகர், சி.வி.ராமன் நகர், சர்வக்ஞநகர், ராஜாஜிநகர், சாம்ராஜ்பேட், மகாதேவபுரா ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் முதல் 5 தொகுதிகள் தமிழர்களை மிக அதிகம் கொண்டவை. சிவாஜிநகர் மற்றும் சர்வக்ஞநகர் தொகுதிகளில் முஸ்லீம் வாக்காளர்கள் அதிகம். இதில் பல சட்டசபை தொகுதிகளிலும் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்றவர்களே மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று வருகிறார்கள்.
ஏழைகள் அதிகம்
இந்த தொகுதியிலுள்ள வாக்காளர்களில் பலரும் வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ளவர்கள். காங்கிரஸ் அல்லது பாஜக நிர்வாகிகளால் அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு இவர்கள் பயன்படுத்தப்படுவதை பார்க்க முடியும். அப்படியிருக்கும்போது, ட்விட்டரில் அரசியல் பேசி வரும் பிரகாஷ்ராஜ் எப்படி இந்த தொகுதியில், ஜொலிப்பார் என்று புருவம் சுளிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
மினி இந்தியா
இதுபற்றி பிரகாஷ் ராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில் விளக்கியுள்ளார். "பெங்களூர் மத்திய தொகுதியை ஒரு மினி இந்தியா என கூற முடியும். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், இந்துக்கள், கன்னட மொழியினர், தமிழர்கள், மலையாளி மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் கணிசமாக உள்ளனர். அவர்கள் என்னை வெறும் நடிகராக மட்டும் பார்க்கவில்லை. சமூக பிரச்சினைகளில் எனது நிலைப்பாட்டை, அவர்கள் உணர்ந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
தொடர் வெற்றியில் பாஜக
பெங்களூர் மத்திய தொகுதியில் கடந்த 3 லோக்சபா தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தற்போது பாஜகவின் பி.சி.மோகன் எம்.பியாக உள்ளார். இவர் தெலுங்கு நாயுடு ஜாதியை சேர்ந்தவர். தெலுங்கு வாக்குகளுடன், தமிழர்களின் கணிசமான வாக்குகளையும் இவர் பெறுவதே இதற்கு காரணம். கடந்த லோக்சபா தேர்தலில் மோகன் பெற்ற வாக்குகள் 557,130. காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத், 419,630 வாக்குகள். ஆனால் 3வது இடம் பிடித்தது எந்த கட்சி தெரியுமா?
பிரகாஷ்ராஜ் திட்டம்
ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பாலகிருஷ்ணன் என்பவர் 39,869 வாக்குகள் பெற்று இத்தொகுதியில் 3வது இடத்தை பிடித்தார். காங்கிரஸ் வேட்பாளரைவிடவும் மிக குறைந்த வாக்குகள் என்றபோதிலும், 3வது இடத்தை பிடித்தது ஆம் ஆத்மி. இந்த வாக்காளர்கள்தான் பிரகாஷ்ராஜின் இலக்கு என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இந்த எலைட் வாக்காளர்களுடன், தமிழர்கள், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி பேசும் மக்கள் வாக்குகளையும் பெறலாம் என்பது பிரகாஜ்ராஜ் திட்டம். தனது சினிமா பிரபல்யம் இதற்கு பயன்படும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் ஏற்கனவே சொன்னபடி சிக்கலான பெங்களூர் மத்திய தொகுதியில் புதிதாக ஒருவர் அதுவும் சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெறுவது என்பது, புயல் காற்றில் பூமாலை விற்பதை போல கஷ்டமானது. பிரகாஷ் ராஜ் திட்டம் வெற்றி பெறுமா என்பதை, லோக்சபா தேர்தல் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.