"போலாம் ரைட்!" கர்நாடக பிரசாரத்தில் படுஜோர்.. டக்குனு பைக் ஏறி பறந்த ராகுல் காந்தி.. எதற்கு தெரியுமா
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, டெலிவரி ஏஜெண்ட் ஒருவர் வண்டியில் அவர் பயணித்த வீடியோ டிரெண்டிங் ஆனது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கே தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன.
தென் இந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்பதால் அங்கே ஆட்சியைக் கைப்பற்றவே பாஜக விரும்புகிறது. அதேநேரம் இதுவரை வந்த பல சர்வேக்கள் பாஜக ஆட்சியைத் தக்க வைக்காது என்றே கூறியுள்ளது.

காங்கிரஸ்: இதனால் உற்சாகமாக இருக்கும் காங்கிரஸ் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறது. அங்கே முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. தேர்தலுக்கு அங்கே சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
காங்கிரஸ் வெல்ல வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படும் நிலையில், அக்கட்சியின் பல தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். அதன்படி அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறார். இன்று பிரசாரத்தில் புல் பார்மில் இருந்த ராகுல் காந்தி செய்த ஒரு செயல் தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதாவது இன்று ராகுல் காந்தி பெங்களூருவில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கே டெலிவரி ஏஜெண்ட் ஒருவர் திடீரென வர, அவரது ஸ்கூட்டரில் ஏறிப் பயணித்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
சமாதானம்: அந்த வீடியோவில் மக்கள் ராகுல் காந்தியைச் சூழ்ந்து இருப்பது தெரிகிறது. அப்போது அங்கே கூட்டத்தில் இருந்து சிறுவன் ஒருவன் அழத் தொடங்கவே ராகுல் காந்தி அவரை சமாதானம் செய்கிறார். சிறுவனுக்கு ஆருதல் கூறிக் கொண்டு இருக்கும் போது, அருகே ஒரு டெலிவரி ஏஜென்ட் வந்து நிற்கிறார்.
அப்போது ராகுல் காந்தி ஹெல்மெட் அணிந்து கொண்டு அந்த டெலிவரி ஏஜென்ட்டின் பின்னால் அமர்ந்தார். இருவரும் மெல்ல அந்த கூட்டத்திலிருந்து விலகிச் சென்றனர். அந்த இடத்தில் இருந்து ஹோட்டல் வரை சுமார் இரண்டு கிலோமீட்டருக்கு ராகுல் காந்தி ஸ்கூட்டரில் சென்றதாகக் கூறப்படுகிறது.
ராகுல் காந்தி எதற்குப் பிரசாரத்திற்குப் பிறகு திடீரென இப்படி ஸ்கூட்டரில் பயணித்தார் என்று தெரியவில்லை. இருப்பினும், மக்களுடன் மக்களாகச் செல்ல ராகுல் காந்தி காரை தவிர்த்துவிட்டு இதுபோல பயணிப்பது இது முதல்முறை இல்லை.

காங்கிரஸ் யாத்திரை: பாரத் ஜோடோ யாத்திரையின் போது மக்களுடன் தனிப்பட்ட முறையில் கனெக்ஷனை ஏற்படுத்த ராகுல் காந்தி இதுபோல பல விஷயங்களைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த மாதம் பழைய டெல்லி சந்தைக்குச் சென்ற ராகுல் காந்தி ரம்ஜான் பண்டிகையின் போது அங்குள்ளவர்களுக்கு விருந்தை பரிமாறினார். டெல்லி பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குச் சென்று மாணவர்கள் அவர்களிடமும் பிரச்சினை குறித்துப் பேசிய அவர், மதிய உணவும் அவர்களுடன் சாப்பிட்டார்.












Click it and Unblock the Notifications