‛‛பிரளயம்’’.. கர்நாடகா தேர்தலில் எம்எல்ஏக்களை கைவிட்ட பாஜக.. பின்னணி இதுதான்.. போட்டுடைத்த அண்ணாமலை
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவில் சிட்டிங் எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள் என ஏராளமானவர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். போராட்டங்களை நடத்துகின்றனர். இந்நிலையில் தான் அவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டதன் பின்னணி காரணம் குறித்து கர்நாடகா மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளரும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் (மே 10ம் தேதி கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கத்தில் பாஜக செயல்பட்டு வருகிறது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தற்போது வரை மொத்தம் 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 12 தொகுதிகள் மட்டும் பெண்டிங்கில் உள்ளது.

பாஜக சார்பில் மொத்தம் 2 கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முதல் பட்டியலில் இடம்பெற்றிருந்த 189 பெயர்களில் சிட்டிங் எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருந்தன. 52 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.
மூத்த தலைவர்களுக்கு கைவிரிப்பு: குறிப்பாக முன்னாள் முதல்வரும் 1994ம் ஆண்டு முதல் உப்பள்ளி-தார்வார் (சென்ட்ரல்) தொகுதி எம்எல்ஏவாக இருந்து வரும் ஜெகதீஷ் ெஷட்டர் பெயர் இந்த 2 பட்டியலில் வெளியாகவில்லை. அதேபோல் பெலகாவி மாவட்டம் அதானி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதி பாஜகவில் ராஜினாமா செய்துள்ளார். அதேபோல் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தொகுதியில் 6 முறை வெற்றி பெற்று அமைச்சராக உள்ள அங்காராவுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் அரசியலில் ஓய்வை அறிவித்துள்ளார்.
போராட்டம்: இதுதவிர துமகூரு முன்னாள் எம்எல்ஏ சுகோடு சிவண்ணா, முடிகெரே சிட்டிங் எம்எல்ஏ எம்பி குமாரசாமி, ஹாவேரியின் நேரு ஒலேகார் ஆகியோரும் ஓய்வை அறித்துள்ளனர். மேலும் பல மூத்த தலைவர்கள், சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் வருத்தத்தில் உள்ளனர். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது? என அவர்கள் விவாதித்து வருகின்றனர். சில இடங்களில் ஆதரவாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அண்ணாமலை விளக்கம்: இந்நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் சிட்டிங் எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பது பற்றி தமிழக பாஜக தலைவரும், கர்நாடகா பாஜக தேர்தல் இணை பொறுப்பாளருமான அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கர்நாடகா பாஜக தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: தேர்தல் தொடர்பாக மாநிலத்தில் பல்வேறு கருத்து கள் கேட்கப்பட்டு வேட்பாளர்கள் மேலிடத்துக்கு பரிந்துரைக்கப்பட்டன. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசிக்கப்பட்டு வேட்பாளர்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.
இது வழக்கமானது தான்: பொதுவாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் போராட்டம் நடத்துவது வழக்கமான ஒன்று தான். அவர்களிடம் கட்சி தலைவர்கள் பேசி சமாதானம் செய்வார்கள். மேலும் ஒரு தொகுதியில் ஒருவருக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்க முடியும். ஒரு தொகுதியில் பலபேர் போட்டியிட விரும்பலாம். ஆனாலும் ஒருவருக்கு தான் வாய்ப்பு வழங்க முடியும். மற்றவர்களுக்கு கட்சியில் அந்தஸ்துகள் வழங்கப்படும். அதாவது தேர்தலில் டிக்கெட் கொடுக்கப்படவில்லை என்றால் அவர்களுக்கு கட்சியில் வேறு பொறுப்பு வழங்கப்படும் என்பது தான் அர்த்தம்.
கட்சி மறக்கவே செய்யாது: ஜெகதீஷ் ஷெட்டர் கட்சியின் மூத்த தலைவர். முதல்வராக இருந்துள்ளார். அவரது விவகாரத்தில் கட்சி மேலிட தலைவர்களுடன் பேசியுள்ளார். அவர்கள் அடுத்தக்கட்ட முடிவை எடுப்பார்கள். மாநிலத்தில் மூத்த தலைவராக உள்ள கேஎஸ் ஈஸ்வரப்பா கர்நாடகா முழுவதும் கட்சி அமைப்பு பணிகளை செய்துள்ளார். தற்போது அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என கடிதம் எழுதியுள்ளார். அவர் 35-40 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தவர். அவர்களின் பங்களிப்பை கட்சி மறக்காது. அவர்களுக்காக கட்சி எதையும் செய்யும்'' என்றார்.












Click it and Unblock the Notifications