கர்நாடகத்தில் பயங்கரம்.. கோர்ட் வளாகத்தில் கழுத்தை அறுத்து மனைவி கொலை.. கணவன் வெறிச்செயல்!
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் விவாகரத்து கேட்ட மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக கோர்ட்டில் கூறிவிட்டு, வெளியே வந்த சில நிமிடங்களில் கொடூர கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தை சேர்ந்தவ தம்பதி சிவக்குமார்- சைத்ரா. கணவன் மனைவியான இருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தொடக்கத்தில் இவர்களது வாழ்க்கை பயணம் இனிதாக தொடங்கினாலும், நாட்கள் செல்ல செல்ல இந்த தம்பதியினருக்குள் மனக்கசப்பு எழுந்தது.

விவாகரத்து கோரி மனு
இதனால், அடிக்கடி சண்டை சச்சரவுகள் எழுந்ததாக தெரிகிறது. உறவினர்கள் சமரசம் செய்தும் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு நீங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து இருவருக்கும் மனக்கசப்புகள் நீடித்ததால், வேறு வழியின்றி விவாகரத்து செய்யலாம் என்ற முடிவுக்கு சிவக்குமாரும் சைத்ராவும் வந்தனர். இதனால், இருவரும் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹோலேநரசிபுரா நகரில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.

சேர்ந்து வாழ்வதாக ஒப்புதல்
இதையடுத்து, சிவக்குமார் - சைத்ரா தம்பதியினரை அழைத்த நீதிமன்றம் கவுன்சிலிங் வழங்கியது. நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட கவுன்சிலிங்கின் போது, இருவரும் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றாக வாழ்வதாக ஒப்புக்கொண்டனர். என்னடா இது கணவர் எப்படி இதற்கு சம்மதித்தார் என்ற சின்ன தயக்கம் சைத்ராவுக்கு இருந்தது. எனினும், கணவனின் திடீர் மனமாற்றத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்த சைத்ராவும், இனிமேலேவாது நிம்மதியாக இல்வாழ்க்கையை தொடரலாம் என்ற எண்ணத்துடன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

கழுத்தை அறுத்த கணவர்
நீதிமன்ற வளாகத்தில் உள்ள வாஷ்ரூம் சென்றார். 'கோர்ட்டில் இப்படி கூறினால் தான் உன்னை சந்தோசமாக பரலோகம் அனுப்ப முடியும்' என்ற வஞ்சக எண்ணத்துடன் தான் கணவர் சிவக்குமார் சேர்ந்து வாழ்வதாக ஒப்புக்கொண்டுள்ளார். வெளியே சைத்ராவை பின் தொடர்ந்து சென்ற சிவக்குமார் வாஷ்ரூமில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி சைத்ராவின் கழுத்தை அறுத்தார். கணவனின் செயலால் அதிர்ச்சி அடைந்த சைத்ரா, ரத்த வெள்ளத்தில் கத்தியபடி அங்கேயே மயங்கி விழுந்தார்.

சிவக்குமாரை கைது செய்த போலீசார்
அதற்குள் சிவக்குமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால், அங்கிருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு சிவக்குமாரை சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாஷ்ரூமில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சைத்ராவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்கு செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அளவுக்கதிமான ரத்தப்போக்கு காரணமாக சைத்ரா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து, சிவக்குமார் மீது இந்திய தண்டனைச்சட்டம் 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.

போலீசார் தீவிர விசாரணை
சிவக்குமாரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "நீதிமன்ற வளாகத்திற்குள் ஆயுதத்துடன் எப்படி சிவக்குமார் வந்தார் என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிவக்குமாரை எங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். இது ஏற்கனவே திட்டமிட்ட கொலையா? என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார். நீதிமன்ற வளாகத்திலேயே நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications