பா.ஜ.க மேலிடம் கூறினால்.. எந்த நேரமும் பதவி விலகத் தயார்.. மனம் திறந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா!
பெங்களூரு: பாஜக மேலிடம் கூறினால் பதவி விலகத் தயார் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மிக மோசமான மாநிலங்களில் ஒன்று கர்நாடகா.
கொரோனா தடுப்பு பணிகளில் சரியாக கவனம் செலுத்துவதில்லை என்று எடியூரப்பா மீது தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

பதவி விலகணும்
இதனால் எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று பாஜகவினரே வலியுறுத்தி வருவதாக தகவல்கள் பரவி வந்தன. மாநில பாஜக தலைவர்கள் சிலர் மறைமுகமாக கருத்து தெரிவித்தனர். பாஜக மேலிடமும் இதே சிந்தனையில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக மவுனம் கலைத்துள்ளார் எடியூரப்பா.

மேலிடம் விரும்பினால் ராஜினாமா
இது தொடர்பாக அவர் கூறியதாவது:- டெல்லி மேலிடம் என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நாள் வரை முதல்வராக தொடருவேன். நான் வெளியேற வேண்டும் என்று அவர்கள் சொல்லும் நாள் ராஜினாமா செய்வேன், மேலும் மாநில நலனுக்காக உழைப்பதில் என்னை முழுமையாக ஈடுபடுத்துவேன். எனது நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அவர்கள் எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர்.

அமைதியாக இருப்பேன்
எனது திறமைகளில் அதைப் பயன்படுத்த முயற்சிக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தலைமையிடமே விட்டு விடுகிறேன். நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் எப்போதும் ஒரு மாற்று இருக்கும். கர்நாடகாவில் மாற்று வழிகள் இல்லை என்று நான் நம்பவில்லை. எனக்கு எதிரான பொதுத் தாக்குதல்கள் குறித்து எந்த கருத்தும் கூறாமல் அமைதியாக இருப்பேன். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மகன் சந்திப்பு
எடியூரப்பாவின் மகனும் மாநில பாஜக துணைத்தலைவருமான விஜேந்திரா நேற்று கட்சியின் தேசியத்தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்துப் பேசி இருந்தார். இந்த நிலையில் எடியூரப்பாவிடம் இருந்து இப்படி ஒரு கருத்து வெளிவந்துள்ளது. எடியூரப்பாவை இப்போதைக்கு மற்றும் திட்டம் இல்லை என்று விஜேந்திராவிடம், ஜேபி நட்டா கூறியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications