லிஃப்ட் கேட்ட பெண்ணுடன் ஹோட்டலில் ரூம் போட்ட ஆர்எஸ்எஸ் நிர்வாகி.. ரெக்கார்டான வீடியோ.. பரபர கர்நாடகா
பெங்களூர்: கர்நாடாகாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவரின் ஆபாச வீடியோவை இணையத்தில் போட்டு விடுவதாக கூறி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.50 லட்சத்தை பறித்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். மேலும், அப்பெண்ணுக்கு உடந்தையாக இருந்த மற்ற நபர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் தக்ஷின் கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிட்டோி ஜகன்நாத் ஷெட்டி (53). இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த நிர்வாகியாக இருக்கிறார். மேலும், அப்பகுதியில் தங்க நகைக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இரவு மண்டியாவில் இருந்து மைசூருக்கு ஜகன்நாத் ஒரு காரில் லிஃப்ட் கேட்டு சென்றுள்ளார். அந்த காரில் ஒரு பெண் உட்பட 4 பேர் இருந்துள்ளனர். பின்னர் மைசூரில் கார் இறங்கியதும் அங்கிருந்த ஓட்டல் அறைக்கு நிட்டேரி ஜகன்நாத் சென்றுள்ளார்.

நெருக்கமாக இருந்தனர்
அப்போது அவருடன் காரில் இருந்த அந்தப் பெண்ணும் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஜகன்நாத்துடன் அந்தப் பெண் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இதனை அந்தப் பெண் தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது.

50 லட்சம்
இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் முதல், அந்தப் பெண்ணும், அவருடன் இருந்தவர்களும் சம்பந்தப்பட்ட வீடியோவை இணையத்தில் போட்டு விடுவதாக கூறி ஜகன்நாத்தை மிரட்டியுள்ளனர். அப்படி அந்த வீடியோவை இணையத்தில் போடக் கூடாது என்றால் தங்களுக்கு ரூ.50 லட்சம் தர வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.

ரூ.4 கோடி கேட்டு மிரட்டல்
இதனால் பயந்து போன ஜகன்நாத் ரூ.50 லட்சத்தை அவர்களுக்கு கொடுத்துள்ளார். ஆனால் அடுத்த சில நாட்களில் மீண்டும் ஜகன்நாத்தை தொடர்பு கொண்ட அந்த கும்பல் தங்களுக்கு ரூ.4 கோடி தர வேண்டும் எனக் கேட்டு மிரட்டினர். இதனால் வேறு வழியின்றி ஜகன்நாத் மண்டியா மேற்கு காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார்.

பானு கைது
இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் ஜகன்நாத்திடம் பணம் கேட்டு மிரட்டிய பானு என்ற பெண்ணை கைது செய்தனர்.விசாரணையில், அவர் மனித உரிமை அமைப்பு ஒன்றில் நிர்வாகியாக இருப்பது தெரியவந்தது. இந்த மோசடியில் பானுவுக்கு உடந்தையாக இருந்த மற்ற நபர்களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆர்எஸ்எஸ் நிர்வாகியை மிரட்டி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications