மோடி, அமித் ஷாவை போல உழையுங்கள்.. காங்கிரஸாருக்கு மல்லிகார்ஜுன கார்கே.. நறுக் 'அட்வைஸ்'
பெங்களூர்: "மக்களை கவர பாஜக செய்யும் உத்திகளை கடைப்பிடியுங்கள்; பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷாவை போல உழையுங்கள்" என்று காங்கிரஸாருக்கு அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவுரை கூறியுள்ளார்.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, அம்மாநிலத்துக்கு நேற்று சென்ற மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸாரிடம் இவ்வாறு கூறியுள்ளார்.
சொந்தக் கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை விட்டுவிட்டு, எதிர் அணியான பாஜக தலைவர்களை பின்பற்றுமாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

நெருங்கும் கர்நாடகா தேர்தல்
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அங்கு ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் இப்போதே களப்பணியை தொடங்கிவிட்டன. ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜகவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். அதேபோல, இம்முறை ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸாரும் முழுவீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

"நூலிழையில் நழுவிய ஆட்சி"
இதன் ஒருபகுதியாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தனது சொந்த ஊரான கலபுரகிக்கு நேற்று வருகை தந்தார். அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர் மத்தியில் அவர் உரையாற்றினார். அவர் பேசியதாவது: கர்நாடகாவில் கடந்த முறை ஒரு நூலிழையில் தான் காங்கிரஸ், ஆட்சிக்கட்டிலை இழந்தது. கர்நாடகா முழுவதுமே காங்கிரஸ் கட்சிக்கு பெரும் செல்வாக்கு உள்ளது. இந்த செல்வாக்கை நாம் வாக்குகளாக மாற்ற பாடுபட வேண்டும்.

"பாஜகவினரிடம் கற்றுக்கொள்ளுங்கள்"
நாம் ஆட்சியில் இருந்தால்தான் மக்களுக்காக நம்மால் உழைக்க முடியும். மக்களுக்கான நலப்பணிகளை செய்ய முடியும். அப்போதுதான், மக்கள் மனதில் நாம் நிலைத்திருப்போம். எனவே, கர்நாடகாவை மீண்டும் காங்கிரஸின் கோட்டையாக மாற்ற நீங்கள் உழைக்க வேண்டும். ஒன்று இரண்டு பேர் மட்டும் உழைத்தால் போதாது. தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவரும் கடுமையாக பணியாற்ற வேண்டும். பாஜகவினவரை பாருங்கள். மக்களை கவர என்னென்ன உத்திகளை அவர்கள் கையாளுகிறார்கள்? அதை பின்பற்றுங்கள்.

"மோடியை போல உழையுங்கள்"
இந்த முறை நம்மிடையே ஒற்றுமை இல்லையென்றால், அது எதிரிக்கு சாதகமாகிவிடும். அதற்கு நாம் இடம்கொடுக்கக் கூடாது. காங்கிரஸை பொறுத்தவரை, எதையும் நாம் எதிர்பார்க்க வேண்டாம். நமது உழைப்பை பார்த்து தலைமையே நமக்கு பதவிகளை வழங்கும். இதற்கு சிறந்த உதாரணம் நான்தான். இதுவரை கட்சித் தலைமைக்கு இந்த பதவி வேண்டும்; அந்தப் பதவி வேண்டும் என நான் கேட்டது கிடையாது. ஆனால், கட்சித் தலைமையே எனக்கு பதவிகளை வழங்கி இருககிறது. காங்கிரஸில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் நிச்சயம் உண்டு. ஒரு மாநிலத்தில் தேர்தல் என்றால், கிராமம் முதல் நகரம் வரை சென்று மக்களை சந்திக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் இதைதான் செய்கிறார்கள். அவர்களை போல காங்கிரஸாரும் உழைக்க வேண்டும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.












Click it and Unblock the Notifications