தமிழகத்துக்கு செல்லும் நீரை பயன்படுத்தி மேகேதாட்டுவில் புதிய அணை.. பட்ஜெட்டில் எடியூரப்பா அறிவிப்பு
பெங்களூர்: காவிரியில் தமிழகத்திற்கு செல்லும் நீரை பயன்படுத்தி மேகேதாட்டுவில் புதிய அணை கட்டப்படும் என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் தமிழக எல்லைக்கு அருகில் உள்ள மேகேதாட்டுவில் காவிரியாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட மாநில அரசு நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது.

இதற்கான திட்ட வரைவு அறிக்கை மத்திய நீர் வளத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் கர்நாடகாவின் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் உள்ளது.
இதனிடையே தமிழக அரசு காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்தை தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகா, அந்த திட்டத்திற்கு அனுமதி தரக் கூடாது என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை முதல்வர் எடியூரப்பா கர்நாடகா மாநிலத்தின் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது அவர் ஆற்றிய உரையில் பெங்களூர் மாநகரில் அதிகரித்துள்ள குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அர்க்காவதி- காவிரி திட்டத்தின் கீழ் காவிரியாற்றில் மேகேதாட்டு அருகே ரூ 9 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்டப்படும்.
இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ பெங்களூருக்கு தடையில்லாமல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும் என எடியூரப்பா அறிவித்துள்ளார். இதை தடுக்க தமிழக அரசு சட்டரீதியாக எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications