பெங்களூரில் இன்று முதல் 3 நாள் வெளுக்கப்போகும் கனமழை.. 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
பெங்களூர்: பெங்களூர் உள்பட 13 மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரில் இன்று முதல் 3 நாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பிற இடங்களில் மழை என்பது இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா உள்பட 11 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த லிஸ்ட்டில் சிவமொக்கா, துமகூரு, கோலார், குடகு, சிக்கமகளூரு, சிக்கபள்ளாப்பூர், பெங்களூர் நகர், பெங்களூர் புறநகர் உள்ளிட்ட மாவட்டங்களும் அடங்கி உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரை எடுத்து கொண்டால் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பெங்களூர் புறநகர், கோலர், சிக்கபள்ளாப்பூர் மாவட்டங்களை சுற்றி கனமழை வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக மஞ்சள் அலர்ட் என்பது குறைந்தபட்சம் 6 சென்டிமீட்டர் முதல் 12 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கும்போது தான் விடுக்கப்படும்.
அந்த வகையில் பெங்களூர், பெங்களூர் புறநகர் உள்பட 11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் இன்று முதல் வரும் 7 ம் தேதி வரை மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர வடகர்நாடகா மாவட்டங்களாக உள்ள பெலகாவி, தர்வார், கதக், ஹாவேரி, கொப்பல், ராய்ச்சூர் மாவட்டங்களிலும் நாளை முதல் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications