30 துண்டுகளாக வெட்டப்பட்டு.. பிரிட்ஜுக்குள் அடைக்கப்பட்ட இளம்பெண்.. பெங்களூரை உறைய வைத்த படுகொலை
பெங்களூர்: பெங்களூரில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் பூட்டிய வீட்டுக்குள் 30 துண்டுகளாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ரிட்ஜுக்குள் துண்டு துண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் வயாலிகாவல் அருகே விநாயகர் நகர் பைப்லைன் பகுதியில் வசித்து வந்தவர் இளம்பெண் மகாலட்சுமி (வயது 26). இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மகாலட்சுமியின் வீடானது கடந்த 10 நாட்களுக்கு மேலாக பூட்டி கிடந்தது. மேலும் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினரால் சகிக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசியதால் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வயாலிகாவல் போலீசார் மகாலட்சுமியின் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவரது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பிரிட்ஜில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதையடுத்து பிரிட்ஜை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பிரிட்ஜுக்குள் பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டி வைக்கப்பட்டு இருந்தது.
மொத்தம் 30 துண்டுகளாக உடல் வெட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்டிருப்பது இளம்பெண் மகாலட்சுமி என்பது தெரியவந்தது. இதன் பின்னர் போலீசார் பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு பெங்களூர் கேஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பூட்டிய வீட்டுக்குள் இருந்து இளம்பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி யார்? எதற்காக கொலை செய்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்டமாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:- மகாலட்சுமி நேபாள நாட்டை சேர்ந்தவர். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. ஒரு குழந்தையும் உள்ளது. நெலமங்களாவில் கணவருடன் வசித்து வந்தார்.
இதற்கிடையே கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவரை பிரிந்தார். இதையடுத்து தான், கடந்த 6 மாதத்திற்கு முன்பு பெங்களூர் வயாலிகாவல் அருகே விநாயகர் நகர் பைப்லைன் பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளார். மேலும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்து மகாலட்சுமியை வேலைக்கு அழைத்து செல்ல வாலிபர் ஒருவர் வீட்டுக்கு அடிக்கடி வருவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதியில் இருந்து மகாலட்சுமியை பார்க்கவில்லை என பக்கத்து வீட்டினர் கூறியுள்ளனர். இதையடுத்து தான் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீடும் வெளிப்பக்கமாக பூட்டி இருந்ததால் மகாலட்சுமியை வேலைக்கு அழைத்து சென்ற நபர் தான் கொலை செய்திருக்கக்கூடும் என்றும், இதேபோல் முன்னால் கணவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்குமோ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். பெங்களூரில் இளம்பெண் 30 துண்டுகளாக வெட்டப்பட்டு பிரிட்ஜுக்குள் இருந்து மீட்கப்பட்டம் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications