3000 டன் சரக்கு.. 24 மணிநேரம்.. அரபு நாடுகளை அதிரவைத்த லுலு! பின்னால் இருக்கும் அந்த 'ஒரு' நபர் யார்
சென்னை: வளைகுடா நாடுகளில் வாழும் மலையாளிகள் விஷு பண்டிகையை கொண்டாடும் சூழலில், கேரளாவிலிருந்து 3,000 டன் விவசாய பொருட்கள் பிரம்மாண்டமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.. லுலு குரூப் தலைவர் யூசுப் அலி முன்னிலையில் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விமானம் மற்றும் கப்பல் வழியாக கேரளாவின் மண்ணின் மணமும் சுவையும் மாறாத பாரம்பரிய பொருட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. விஷுக்கணிக்கு தேவையான கனி வெள்ளரி, நேந்திரம் பழம் முதல் கொன்றை பூக்கள் வரை அனைத்தும் 250-க்கும் மேற்பட்ட லுலு ஹைப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன..
விஷு பண்டிகையின் மிக முக்கியமான சடங்கான "விஷுக்கணி" வைப்பதற்கு தேவையான பிரத்யேக பொருட்கள் வளைகுடா நாடுகளில் கிடைப்பது கடினம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

லுலு குரூப் தந்த சர்ப்ரைஸ்
இதில் முக்கியமாக கனி வெள்ளரி, நேந்திரம் பழம், கைச்சக்கை எனப்படும் அன்னாசி, மாம்பழங்கள், சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, முருங்கைக்காய் மற்றும் பல்வேறு வகையான பூசணிக்காய்கள் இடம் பெற்றுள்ளன.. மேலும் விஷுக்கணிக்கு மிக அவசியமான கொன்றை பூக்களும் சிறப்பு பொதிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன..
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஓமன் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட லுலு ஹைப்பர் மார்க்கெட்டுகளில் இந்த பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.. இதற்காக கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய 4 விமான நிலையங்கள் வழியாக சிறப்பு சரக்கு விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.. இது தவிர அதிக எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல கடல் வழி போக்குவரத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளது..
வளைகுடா நாடுகள்
இந்த 3,000 டன் பொருட்களும் கேரளாவின் உள்ளூர் விவசாயிகள் மற்றும் குடும்பஸ்ரீ போன்ற சுயஉதவி குழுக்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.. இதன் மூலம் கேரள விவசாயிகளுக்கு சர்வதேச அளவில் ஒரு பெரிய சந்தை வாய்ப்பு கிடைத்துள்ளது.
வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாடுவது போன்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே லுலு குரூப்பின் நோக்கமாக உள்ளது.. தரமான பொருட்கள் சரியான நேரத்தில் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன..
கேரளா விவசாயிகள்
கேரளாவின் பாரம்பரிய விளைபொருட்கள் சர்வதேச சந்தையில் இவ்வளவு பெரிய அளவில் தடம் பதிப்பது அந்த மாநில விவசாய துறைக்கு கிடைத்த ஒரு பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.. இந்த விஷு பண்டிகை காலத்தில் வளைகுடா நாடுகளில் உள்ள மலையாளிகளின் இல்லங்களில் கேரளாவின் சுவை நிறைந்திருப்பதை லுலு குரூப் உறுதி செய்துள்ளது.
வெளிநாடுகளில் வசித்தாலும் தங்கள் கலாச்சாரம் மற்றும் உணவு முறைகளை மக்கள் மிஸ் பண்ணக் கூடாது என்பதற்காகவே ஆண்டுதோறும் இது போன்ற பிரம்மாண்ட ஏற்பாடுகளை லுலு நிறுவனம் செய்து வருகிறது.. இந்த ஆண்டும் மிக நேர்த்தியாக திட்டமிட்டு 3,000 டன் பொருட்களை விநியோகம் செய்திருப்பது வளைகுடா வாழ் இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது..!!












Click it and Unblock the Notifications