சம்பள உயர்வுக்காக காத்திருக்கும் இன்போசிஸ் ஊழியர்கள்.. கேப்பில் கெடா வெட்டிய சிஇஓ சலில் பாரிக் - ரூ.51 கோடி பாஸ்!
இந்தியாவின் 2வது பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் தனது மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு அதன் பங்கு மதிப்பு தடாலடியாக சரிந்து வெள்ளிகிழமை மட்டும் 7 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. முதலீட்டாளர்கள் மத்தியிலும் பெரும் ஏமாற்றத்தை இன்போசிஸ் கொடுத்துள்ளது, குறிப்பாக ஏஐ சார்ந்த வர்த்தகத்தில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்போசிஸ் நிர்வாகம் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பாரீக்குக்கு சுமார் ரூ.51.75 கோடி மதிப்பிலான பங்கு அடிப்படையிலான சம்பள தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இன்னும் தங்களது வருடாந்திர சம்பள உயர்வு குறித்து அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் இந்த பெரிய தொகை சிஇஓ-வுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இன்போசிஸ் மார்ச் காலாண்டில் நிகர லாபம் 20.9 சதவீதம் உயர்ந்து ரூ.8,501 கோடியாக இருந்தது. வருவாயும் 13.4 சதவீதம் அதிகரித்தது. மேலும் இன்போசிஸ் நிர்வாகம் சிலில் பாரிக்கிற்கு அளிக்கப்பட்ட டார்கெட்களை எட்டிய காரணத்தால் 51 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.
இன்போசிஸ் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டும் ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜயேஷ் சங்க்ராஜ்கா, சம்பள உயர்வு பற்றிய விவாதங்கள் இன்னும் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஊழியர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இன்போசிஸ்-ன் சக போட்டி நிறுவனமான டிசிஎஸ் காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட போதே சம்பள உயர்வு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படும் என அறிவித்தது.
51.75 கோடி ரூபாய்
ஏப்ரல் 23 அன்று இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு சலில் பாரிக்கிற்கான பங்கு அடிப்படையிலான சம்பள தொகைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் Restricted Stock Units (RSUs) வடிவில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். மே 2, 2026 முதல் இது அமலுக்கு வரும். இந்த தொகை ஒரே தவணையில் அல்ல, பல செயல்திறன் அடிப்படையிலான பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
- ரூ.34.75 கோடி - நிறுவன வாரியம் நிர்ணயித்த செயல்திறன் இலக்குகளை எடுவதற்காக வழங்கப்படுகிறது. 12 மாதங்களுக்குப் பிறகு இலக்குகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இது கிடைக்கும்.
- ரூ.2 கோடி - சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாக (ESG) இலக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- ரூ.5 கோடி - பங்குதாரர்களின் மொத்த வருமானத்துடன் தொடர்புடையது. இது 2027 மார்ச் மாதத்துக்குப் பிறகு மட்டுமே வழங்கப்படும்.
- ரூ.10 கோடி - 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பங்கு உரிமை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது அனைத்தும் பங்குகளாக இலக்குகளை எட்டிய பின்பு சிலில் பாரிக்கிற்கு கிடைக்கும். அதாவது தற்போது அறிவிக்கப்பட்ட 51.75 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் அடுத்த வரும் இலக்குகளை எட்டிய பின்பு அளிக்கப்படுவதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த ஊக்கத்தொகையின் இறுதி அளவு பங்கு விலையைப் பொறுத்தது அமையும் என்பதால், நிறுவனத்தின் எதிர்கால செயல்பாட்டுக்கு இணையாக சம்பளம் உயரும்.
இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த 51 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு ஒதுக்கீடு செயல்திறன் அடிப்படையில் வெகுமதி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு இது நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஊழியர்களுக்கு உடனடியாக சம்பள உயர்வின் மூலம் நிவாரணம் தேவைப்படும் நிலையில் இந்த முடிவு ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications