கச்சா எண்ணெய் விலை உயர்வு : டிவி, பிரிட்ஜ் விலை உயரப்போகுது! - நிறுவனங்கள் சூசகம்
பிரிட்ஜ், டிவி, வாஷிங்மெசின் உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ஜூன் மாதம் முதல் இந்த விலை உயர்வு
மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால், பிரிட்ஜ், டிவி, வாஷிங்மெசின் உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ஓரிரு மாதங்களில் இந்த விலை உயர்வு அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை 5 ஆண்டில் இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. இது நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒபெக் கூட்டமைப்பு நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகியவை கச்சா எண்ணெய் விநியோகத்தை குறைத்ததாலும் வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் உற்பத்தி குறைந்ததாலும் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் புவிசார் அரசியலில் பதற்றம் நிலவுவதும் விலையேற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
பெட்ரொலிய திட்டம் மற்றும் ஆய்வு அமைப்பு அளித்துள்ள தகவலின் படி, 2017ஆம் நிதியாண்டில் இந்தியாவில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை சராசரியாக ரூ. 3172.13 இருந்தது. 2018ஆம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் சராசரி விலை ரூ.3763.74 ஆக உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் பீப்பாயின் விலை சராசரியாக 4622.14 ரூபாயாக உள்ளது. அதிகபட்சமாக ஏப்ரல் 30ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 4761.53 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதனால் கச்சா எண்ணெயில் இருந்து எடுக்கப்படும் பாலி எத்திலீன் போன்றவற்றின் விலையும் உயர்ந்து விட்டது. இதுபோல் தாமிரம், அலுமினியம், ஸ்டீல் விலையும் அதிகரித்து விட்டன.
இதன் தாக்கம் நுகர்பொருள்கள் தயாரிப்பில் எதிரொலிக்க உள்ளது. டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி போன்றவை தயாரிக்க உதவும் மூலப்பொருட்கள் விலை அதிகரித்து விட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மட்டுமின்றி, ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதி செலவு அதிகரித்து விட்டதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தயாரிப்பு செலவு அதிகரிப்பதால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி, மைக்ரோவேவ் ஓவன் ஆகியவற்றின் விலையை ஜூன், அல்லது ஜூலை மாதத்தில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications