இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பண பரிவர்த்தனைகள் பாதிக்கப் படும் அபாயம்
சென்னை: சம்பள திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
சம்பள திருத்தத்தை மேற்கொள்வது, வங்கித் துறை சீர்த்திருத்தங்களை நிறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கி ஊழியர்களின் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் அவர்களின் கோரிக்கைகள் குறித்து வங்கி ஊழியர்களின் சங்கங்களுக்கும், வங்கி அமைப்புகளுக்கும் இடையே கடந்த சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாததால் தோல்வி அடைந்தது. இதையடுத்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18ம் தேதி (இன்று) நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த வங்கி ஊழியர்கள் சங்கங்கள் முடிவு செய்தன.
அதன்படி, இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சம் ஊழியர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இந்த வேலை நிறுத்தத்தால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் பண பரிவர்த்தனைகள் பாதிக்கப் படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.