ரொக்கத் தள்ளுபடி, பரிசுக் கூப்பன்-மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு அதிரடி
டெல்லி: மின்னணு பணப் பரிவர்த்தனையை மேலும் ஊக்குவிப்பதற்காக, ஆன்லைன் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் அனைவருக்கும் ரொக்கத் தள்ளுபடி, சிறப்பு பரிசுக் கூப்பன் போன்றவற்றை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு மதிப்பிழப்பு செய்யப்பட்டது.
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களே கறுப்பு பணத்தை பதுக்கி வைப்பதற்கும் முறைகேடான பணப்பரிவர்த்தனைக்கும் துணை போவதாலேயே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்டன.
உயர் மதிப்புடைய நோட்டுக்களை செல்லாததாக அறிவிக்கப்பட்டு, அதற்கு பதிலாக மக்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை என்னும் மின்னணு பணப் பரிவர்த்தனைணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். கூடவே டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நபர்களில் குலுக்கல் முறையில் ஒருவரை தேர்ந்தெடுத்து ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

மின்னணு பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிக்கல்
மத்திய அரசு மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க எவ்வளவுதான் முயற்சி எடுத்து போராடினாலும், நகர்ப்புற மக்கள் மட்டுமே மின்னணு பணப் பரிவர்த்தனையே மேற்கொண்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் போதிய அளவு இணைய வசதி இல்லாததாலும், போதிய கல்வி அறிவு இல்லாததாலும், கிராமப்புற மக்கள் மின்னணு பணப்பரிவர்த்தனையை மேற்கொள்வதில் சிக்கல் தொடர்கின்றன.

ரொக்கப் பரிவர்த்தனைக்கு விருப்பம்
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையும் அமல்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகிவிட்டது. தற்போது பெரும்பாலான தொழில்நிறுவனங்களும், வர்த்தகர்களும் தங்களின் வர்த்தக பணப் பரிமாற்றங்கள் அனைத்தையும். மின்னணு பரிவர்த்தனையாகவே மேற்கொள்ள வங்கிகளால் நிர்பந்திக்கப்படுகின்றனர்.
ஆனால், கடன் அட்டை (Credit or Debit Card) மூலம் மின்னணு பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து 100 ரூபாய்க்கு 2 ரூபாய் வீதம் சேவைக் கட்டணமாக வர்த்தகர்கள் எடுத்துக்கொள்கின்றனர்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதம்
கார்டு மூலம் பொருட்களை வாங்கும் போது வர்த்தகர்களும், வாடிக்கையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. இல்லை என்றால் வாடிக்கையாளர்கள் பணத்தை ரொக்கமாக கொடுத்துவிட்டுச் செல்லும் நிலை ஏற்படுகிறது. வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நிலைமையை புரிந்துகொண்ட மத்திய அரசும் மின்னணு பணப் பரிவர்த்தனையை மேலும் ஊக்குவிக்க, புதிதாக திட்டம் தீட்டி உள்ளது.

ஜிஎஸ்டி கூட்டத்தில் விவாதம்
மத்திய அரசின் வருவாய்த் துறை இதற்கான செயல் திட்டத்தை தீட்டி உள்ளதாக தெரிகிறது. மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் புதிய செயல்திட்டம் பற்றி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் வரும் 4ம் தேதி நடைபெறவிருக்கும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் விவாதிக்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் வட்டத்தில் தெரிவிக்கின்றனர்.

வருமான வரியில் சலுகை
இந்த புதிய செயல்திட்டத்தின்படி, மின்னணு பணப் பரிவர்த்த மேற்கொள்ளும் அனைவருக்கும், ரொக்கத் தள்ளுபடி, மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். அதாவது விற்பனை விலையில் (MRP) குறைந்தபட்சம் 100 ரூபாய் வரையிலும் தள்ளுபடிச் சலுகை வழங்கப்படும் என்றும். பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தங்களின் சராசரி வருவாய்க்கு ஏற்றபடி சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பரிசுக்கூப்பன்
ஊக்கப்பரிசுகள் வழங்குவது, வர்த்தகர்களையும் தொழில் நிறுவனங்களையும் மேலும் மின்னணு பரிவர்த்தனை மேற்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக இருக்கும். மின்னணு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாக, வருமான வரித்துறையும் வரிச் சலுகை வழங்க வழிவகை செய்யும் வகையில் செயல் திட்டம் வகுக்கவும் பிரதமர் அலுவலக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications