லெனோவா, ஸியோமி... இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 40% இடத்தை பிடித்த சீன செல்போன்கள்
இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனங்களின் தயாரிப்புகளே 40% இடத்தைப் பிடித்துள்ளதாக சர்வே ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
டெல்லி: டிஜிட்டல் இந்தியாவிற்கு மாறத் தொடங்கிய பின்னர் மக்கள் ஸ்மார்ட் போனுக்கு மாறி வருகின்றனர். அழகான வடிவமைப்பு, உள்ளங்கைகளுக்குள் உலகத்தை தெரிந்து கொள்வதில் உள்ள ஆர்வம் ஸ்மார்ட்போன் பக்கம் மக்களை சாய்த்து வருகிறது.
இன்றைக்கு ஸ்மார்ட் போன் இல்லாத கைகள் இல்லை. மனித கைகளில் ஆறாவது விரலாய் உள்ளது ஸ்மார்ட் போன்கள்தான். ஒவ்வொருவரும் ஸ்மார்ட்போன் வாங்குவதில் அதீத ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இதை கருத்தில்கொண்டு, சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், மலிவான விலையில் ஸ்மார்ட்போன் தயாரித்து, இந்திய சந்தையில் விற்கத் தொடங்கியுள்ளன.
மலிவான விலை, நேர்த்தியான வடிவமைப்பு போன்ற காரணங்களால், சீனத் தயாரிப்புகளை இந்தியர்கள் அதிகம் விரும்புகின்றனர். அவற்றின் விற்பனையும் மளமளவென அதிகரித்துள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தை
ஆன்லைனில் செல்போன் வாங்குவது அதிகரித்த பின்னர் லெனோவா பக்கம் மக்கள் சாயத் தொடங்கிவிட்டனர். ஸியோமி, லெனோவா போன்ற ஸ்மார்ட் போன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன தயாரிப்புகளின் பங்களிப்பு 40 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கூறுகிறது புள்ளி விபரம்
ஐடிசி ஆய்வு
பன்னாட்டு தகவல் கார்ப்பரேஷன் சுமார் 30 முக்கிய நகரங்களில் நடத்திய ஆய்வுகளின் படி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய நிறுவனங்களில் மைக்ரோமேக்ஸ் மட்டுமே தொடர்ந்து போட்டிபோட்டு வருவதாகவும் இதுபற்றி ஆய்வு நடத்திய ஐடிசி குறிப்பிட்டுள்ளது.
லெனோவா
கடந்த ஆண்டு 3ஆம் காலாண்டில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்குப் பிறகு லெனோவாஅதிக அளவில் இந்தியாவுக்கு ஸ்மார்ட்ஃபோன்களை அனுப்பியுள்ளது. ஸியோமி ஸ்மார்ட்போன் நிறுவனம் 10.7% சந்தைப் பகிர்வு கொண்டுள்ளது.
ஸ்மார்ட் போன்கள்
இதனையடுத்து இந்திய உள்நாட்டு செல்போன் தயாரிப்பாளர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்டோபரில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் விற்பனை ஒப்பீட்டு அளவில் 16.7% குறைந்துள்ளது. 1.34 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவை மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய சந்தை என்று பார்ப்பதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சந்தைக்குள் நுழைந்த போன்கள்
ஸ்மார்ட் போன் சந்தையில் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டரோலா உயர்மட்ட சந்தையைக் குறிவைக்க, லெனோவோ நிறுவனம் கீழ்மட்டச் சந்தையைக் குறிவைத்து பயன்கண்டுள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அப்போ நிறுவனம் 1.5 பில்லியன் யுவான் தொகையை இந்தியாவில் தொழிற்பூங்கா அமைக்க முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் உற்பத்திச் செலவை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே அப்போவிற்கு கிரேட்டர் நொய்டாவில் தொழிற்சாலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடும் போட்டி
போட்டியினால் ஏற்படும் விலை நிர்ணயப் போர், காப்புரிமை மற்றும் கட்டணம் ஆகியவையும் இந்தியச் சந்தையில் பெரிய சவாலாக உள்ளதாக சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களான அப்போ, விவோ, ஸியோமி ஆகிய நிறுவனங்களை மேற்கோள் காட்டி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு அதிகம் மணமிருக்கும் என்று வரவேற்பு கொடுக்கின்றனர் நம்மவர்கள்.