டீசல் விலை மீண்டும் 50 பைசா உயர்வு: மானியமற்ற சிலிண்டர் விலை குறைப்பு!
சென்னை: டீசல் விலை மீண்டும் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மானியமில்லாத சிலிண்டர் விலை 102 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
டீசல் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்யும் வகையில், மாதந்தோறும் 50 காசுகள் வரை விலையை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், டீசல் விலை உயர்வு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வரிகள் தவிர லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் டீசல் லிட்டருக்கு ரூ.57.95க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று நள்ளிரவு விலை உயர்வு அமலுக்கு வரும்போது, லிட்டருக்கு 61 காசுகள் அதிகரித்து ரூ.58.56க்கு விற்பனை செய்யப்படும்.
இதேபோல் டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.53.34ல் இருந்து ரூ.54.91 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.58.91ல் இருந்து ரூ.59.50 ஆகவும், மும்பையில் ரூ.62.60ல் இருந்து ரூ.63.23 ஆகவும் விற்பனை செய்யப்படும்.
அதே நேரத்தில் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சிலிண்டர் விலை குறைப்பு
ஆனால், மானியமில்லாத சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மானியமில்லாத சிலிண்டர் விலை 1,234 ரூபாயில் இருந்து 1,132 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் மானியமில்லாத சிலிண்டர் விலை 102 ரூபாய் குறைந்துள்ளது.