பெட்ரோல் விலையைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.3 உயருகிறது!
டெல்லி: டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகலாம்.
டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்த்த வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதுபோல மண்எண்ணை விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்த வேண்டும் என்றும், சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.50 அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
எனவே இவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஒரு பேரல் பெட்ரோல் நேற்று அமெரிக்க டாலரில் 114.44-ல் இருந்து 117.40 டாலராக உயர்ந்தது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு ரூ.1,63 காசுகள் அதிகரித்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் இழப்பை சரிகட்ட பெட்ரோல் விலை உயர்வு நள்ளிரவே அமலுக்கு வந்தது.
கச்சா எண்ணை விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவுக்கு சென்று விட்டது. இதனால் டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணை ஆகியவற்றின் விலையை கண்டிப்பாக உயர்த்தியே தீரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சர்வதேச விலை அளவுடன் சமன் செய்வதற்காக, கடந்த ஜனவரி மாதம் முதல் டீசல் விலை மாதம்தோறும் 50 காசுகள் உயர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications