தங்கம் விலை 38% குறையாது.. ஆனால் "இந்தளவுக்கு" குறையும்.! ஆனந்த் சீனிவாசன் தந்த மிக முக்கிய விளக்கம்
சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள ரெசிப்ரோக்கல் வரி காரணமாகத் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதற்கிடையே தங்கம் விலை 38% வரை குறையலாம் என வல்லுநர் ஒருவர் குறிப்பிட்டது கடந்த சில நாட்களாகவே டிரெண்டாகி வரும் சூழலில், இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் எளிமையான விளக்கத்தை அளித்துள்ளார். கடந்த காலங்களில் தங்கம் விலை இதுபோல குறைந்து இருக்கிறதா.. மீண்டும் அதுபோல குறையுமா என்பது குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் மீதும் டிரம்ப் வரியை அறிவித்தார். இதனால் ஒரு பக்கம் சர்வதேச பங்குச்சந்தைகள் சரிந்த நிலையில், தங்கம் விலை பறந்து உச்சம் தொட்டது. சர்வதேச சந்தை முதல் இந்தியச் சந்தை வரை வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை வர்த்தகமானது.

தங்கம் விலை
நேற்றைய தினம் மட்டும் சென்னையில் சற்று குறைந்தது. நேற்றைய தினம் சவரனுக்கு 1280 ரூபாய் குறைந்தது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ 8,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு சவரன் தங்கம் ரூ 67,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
38% குறையுமா?
இது ஒரு பக்கம் இருக்கக் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை 38% வரை குறையலாம் என வல்லுநர் ஒருவர் குறிப்பிட்டது கடந்த சில நாட்களாகவே டிரெண்டாகி வந்தது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் இது குறித்த விளக்கத்தை அளித்துள்ளார். கடந்த காலங்களில் இதுபோல நடந்திருக்கிறதா என்பதை விளக்கிய அவர், வரும் காலத்தில் இதுபோல நடக்க வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "மார்னிங் ஸ்டார் செய்தி நிறுவனத்தின் அனாலிசிஸ்ட் ஸ்டூவர்ட் என்பவர் தங்கம் விலை 38% வரை சரியும் எனக் கணித்துள்ளார். இதற்கு முன்பு தங்கம் விலை இந்தளவுக்குச் சரிந்து இருக்கிறதா என்றால்.. ஆம் விழுந்து இருக்கிறது. 1980ம் ஆண்டு அதுபோல நடந்து இருக்கிறது. 800 டாலராக இருந்த இருந்த தங்கம் விலை 200 டாலராக சரிந்தது.
அப்போது அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுநராக பாவ் வாக்கர் என்ற ஒருவர் இருந்தார். அவர் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்தை 20%ஆக உயர்த்தி, அமெரிக்காவை மிகப் பெரிய பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளினார். அப்போது பணவீக்கம் உச்சத்தில் இருந்ததால் அந்த நடவடிக்கை தேவைப்பட்டது. இப்போதும் பணவீக்கம் முழுமையாகக் குறைவதற்கு முன்பே அமெரிக்க வட்டி விகிதம் குறைக்கப்பட்டதாலேயே தங்கம் விலை அதிகரிக்கிறது.
3 தலைவர்கள்
புவிசார் அரசில் பதற்றம் காரணமாகவே மக்கள் அதிகளவில் தங்கம் வாங்குவதாகவும் இதனால் தங்கம் விலை தங்கம் விலை அதிகரிப்பதாக ஸ்டூவர்ட் சொல்கிறார். புவிசார் அரசில் பதற்றம் சீரடைந்தால் தங்கம் விலை குறையும் என அவர் சொல்கிறார். அது சரி தான்.. புவிசார் அரசியல் சீரடைந்தால் தங்கம் விலை குறையும். ஆனால், அப்படி புவிசார் அரசில் பிரச்சினை முடிவுக்கு வர டிரம்ப், ஜி ஜின்பிங், புதின் ஆகியோர் மாற வேண்டும்.
தற்போதைய சூழலில் டிரம்ப் மாற வாய்ப்பில்லை. அடுத்த 4 ஆண்டுகளுக்கு அவர் தான். அதன் பிறகும் வே.டி. வான்ஸ் போன்ற நபர் அதிபரானால் நிலைமை மேலும் மோசமாகும். அங்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பலவீனமாகவே இருக்கிறது. மற்றொருபுறம் புதின் மற்றும் ஜி ஜின்பிங் கூட கிட்டதட்ட மன்னராட்சி போலத் தான் நடத்தி வருகிறார்கள். இவர்கள் மூவரும் இருக்கும் வரை புவிசார் அரசியல் பதற்றம் முடியாது.
இப்போது இல்லை
ஏற்கனவே சீனா, ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் கைவசம் இருக்கும் டாலரை விற்றுவிட்டுத் தங்கத்தை வாங்கி வருகிறார்கள். டிரம்ப் செய்யும் கூத்தை எல்லாம் பார்த்த பிறகு சீனா தங்கம் வாங்குவதை அதிகரிக்கவே செய்யும் என நினைக்கிறேன். எனவே, இப்போது இந்த சூழல் இல்லை.. அடுத்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலை வர வாய்ப்பு இருக்கிறதா எனக் கேட்டால், வரலாம். ஆனால் அப்போது நமக்கு முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்துவிடும்.
எவ்வளவு குறையும்
அமெரிக்கா வட்டி விகிதத்தை அதிகரித்தால் மட்டுமே இதுபோல நடக்கும். ஆனால், அமெரிக்க வட்டி விகிதத்தை அதிகமாக உயர்த்தினால் இந்திய ரூபாய் அழுத்தத்தில் வரும். இங்கிருக்கும் அந்நிய முதலீடுகளை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். எல்லா டாலரும் அமெரிக்காவுக்குப் போய்விடும். ரூபாய் மதிப்பும் சரியும். எனவே, ரூபாய் மதிப்பில் சரிந்தாலும் 10 முதல் 12% மட்டுமே தங்கம் விலை சரியும். ஆனால், அப்போது என்ன நடக்கும் என்பதை யாராலும் துல்லியமாகக் கணிக்கவே முடியாது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications