இ-வே பில் அமல்படுத்தியதால் சரக்கு பரிமாற்றத்தில் கடும் சரிவு
இ-வே பில் அமல்படுத்தப்பட்டதால் வழக்கமாக நடைபெரும் சரக்கு பரிமாற்றத்தில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி: மாநிலங்களுக்கு இடையில் சரக்கு பரிமாற்றம் செய்வதற்கு இ-வே பில் அமல்படுத்தப்பட்டதால் வழக்கமாக நடைபெரும் சரக்கு பரிமாற்றத்தில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல், சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டன. ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டாலும், சரக்குகளை ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கும், வேறு மாநிலங்களுக்கும் கொண்டு செல்வதற்கு பயன்படும் சரக்கு பரிமாற்றம் (Stock Transfer) என்னும் முறைக்கு எந்தவிதமான ஆவணங்களை பயன்படுத்துவது என்பதில் வர்த்தகர்களுக்கும் தொழில்துறையினருக்கும் பெரும் குழப்பம் இருந்து வந்தது.
வர்த்தகர்களின் நிலைமையை புரிந்துகொண்ட ஜிஎஸ்டிஎன் ஆணையம், சரக்கு பரிமாற்றத்திற்கு தேவையான இ-வே பில் (E-Way Bill) படிவங்கள் தயாரிக்கும் பணிகள் நடந்துவருவதாகவும், கூடிய விரைவில் அவை முழுமைபெற்று நடைமுறைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தது. அதுவரையில் சரக்கு பரிமாற்றத்திற்கு பழைய நடைமுறையை பின்பற்றுமாறு ஜிஎஸ்டிஎன் ஆணையம் தெரிவித்தது. ஜிஎஸ்டிஎன் ஆணயம் சொன்னதுபோலவே, கடந்த பிப்ரவரி மாதம் முதல் சோதனை அடிப்படையில் இ- வே பில் முறையை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தது. கூடவே, இ-வே பில் முறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தது.
எலக்ட்ரானிக் பில் முறை
தொழில் துறையினரும், வர்த்தகர்களும் எதிர்பார்த்ததுபோலவே, இ-வே பில் முறை கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. கூடவே 50000 ரூபாய் வரையில் சரக்குகளை வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு இ-வே பில் தேவையில்லை என்றும், வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கும் இ-வே பில் தேவையில்லை என்றும் அறிவித்தது. அதேபோல, மாநிலத்திற்குள் சரக்குகளை கொண்டு செல்வதற்கு, இ-வே பில் முறை ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தது.
சரக்கு பரிமாற்றத்தில் சரிவு
இ-வே பில் முறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு 2 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், இ-வே பில் முறை அமல்படுத்தப்பட்ட பின்பு சரக்கு பரிமாற்றம் கடும் சரிவை சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது பருவநிலை மாற்றத்தினாலும், காலம் தவறி பெய்யும் மழையினாலும் சரக்குகளை மாநிலங்களுக்கு இடையில் கொண்டு செல்வதில் சுனக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 10 நாட்களில் சரக்கு பரிமாற்றத்தில் 15 சதவிகிதம் வரையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி விலக்கு
இதுபற்றி விளக்கிய இந்திய போக்குவரத்து பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.சிங், தற்போது இந்தியா முழவதும் அறுவடைக் காலம் என்பதால், சரக்கு வாகனங்களில் பெரும்பாலானவை, விவசாய விளைபொருட்களை கொண்டுசெல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஜிஎஸ்டியில் விவசாய விளைபொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், இவற்றை பரிமாற்றம் செய்வதற்கு இ-வே பில் தேவையில்லை.
பருவநிலை மாற்றம்
தற்போது பருவ நிலை மாற்றத்தினாலும், பருவம் தவறி மழை பெய்வதாலும், சரக்குகளை பரிமாற்றம் செய்வதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முறை தவறி பெய்யும் மழை மற்றும் காலநிலை மாற்றங்களினாலும் இ-வே பில் முறையில் சரக்குகளை பரிமாற்றம் செய்வதில் சுமார் 30 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றார்.
சரக்கு பரிமாற்றம்
இ-வே பில் முறையை பயன்படுத்துவதில் ஆந்திரா, தெலுங்கான, கேரளா, உத்தரப் பிரதேசம், மற்றும் குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்கள் முன்னனியில் உள்ளன. கடந்த 8ம் தேதி வரையிலும், மொத்த இ-வே பில் பயன்பாட்டில் 61 சதவிகிதம் வரையில் மேற்சொன்ன ஐந்து மாநிலங்களே பயன்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல், இந்த ஐந்து மாநிலங்களே, மாநிலத்திற்குள் சரக்குகளை பரிமாற்றம் செய்வதற்கு இ-வே பில் முறையை அமல்படுத்துவதற்கு தயாராக உள்ளன.
வாட் வரி விதிப்பு முறை
தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் முன் மாதிரியாக விளங்கும் கர்நாடகா, கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதலே தங்கள் மாநில எல்லைக்குள் ஒரு கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தூரங்களுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கு இ-வே பில் முறையை அமல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. வாட் வரி விதிப்பு முறையிலும், இ-சுகம் (E-Sugam) என்னும் இணையதள பில் முறையை பயன்படுத்தியது கர்நாடக மாநிலம் மட்டுமே.
நிதி ஆண்டு 2017-18
இ-வே பில் முறையை பயன்படுத்துவதில் சரிவு ஏற்பட முக்கிய காரணம், தற்போது அனைத்து வர்த்தக நிறுவனங்களும் தொழில் துறையினரும், தங்களின் 2017-18ம் நிதி ஆண்டுக்கான கணக்குகளையும் சரக்குகளையும் சரிபார்த்து இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக இருக்கின்றனர். எனவே, இந்த சரிவு தற்காலிகமே. இன்னும் ஒரிரு நாட்களில் இ-வே பில் பயன்படுத்தும் முறை தீவிரமடையும் என்று பெரும்பாலான ஜிஎஸ்டி வரி ஆலோசகர்கள் கருத்து தெரிவித்தனர்.